Friday, March 30, 2018

வீரயுக நாயகன் வேள்பாரி

ஆனந்தவிகடனில் வரும் ஆர்வமாகப் படிக்கும்படியான ஒரே தொடர் வீரயுக நாயகன் வேள்பாரி பாரி மட்டுமே. சு. வெங்கடேசன் அதை எழுதிவருவதால் சொல் நடைக்கும், சுவாரஸ்யம் திற்கும் குறைவில்லை. வரலாற்றுப் பதிவில் அவர் கல்கியை நெருங்குகிறார் . இயற்கை பற்றி அறிய அறிய வியந்தது ஒருபக்கம் எனில். இத்தொடரின் நாயகன் வேள்பாரியின் மீது காதல் வருகிறது மறுபுறம். ஆதனியை இடம்பெயர்த்துவிடலாமா என்ற ஆவல் வந்துவிடுகிறது. அவனின் திறமையும், வீரத்தின் சான்றும் திக்குமுக்காடச்செய்கிறது .

  இயற்கை ஒரு கடல் எவ்வுளவு தூரம் வேண்டுமானாலும் நீந்தலாம் நாம்தான் அயர்ந்து போவோம் நம்மை எப்பொழுதும் வியப்பில் வைத்திருப்பதே அதன் இயல்பு. இலைகளும், கொடிகளும், ஒவ்வொரு மரங்களும் அதன் தன்மைகளும் படிக்கும் பொழுது கண்கள் விரிவதைத் தடுக்க இயலவில்லை. அதற்கு ஈடு கொடுத்தார்போல் விலங்குகளும் அவற்றின் தனித்துவங்களும் அறிய வேண்டிய ஒன்று.

 இத்தொடர் இப்பொழுது முடியும் தருவாயில் உள்ளது . முடிவதற்கு முன்பே இதைப்பற்றி எழுதத் தூண்டியது பாரியின் மேல் கொண்ட காதலால். பாரியை வீழ்த்திவிட்டனர் என்பதைப் படித்த பின் எழுத மனமுறாது அதை ஏற்கவும் முடியாதென்பதால் இப்பொழுதே எழுதலானேன். பார் போற்றும் கவிஞர் கபிலர் பேச்சற்றுப்போவார் பாரியின் முன்னால் இதில் புரிந்துகொள்ள லாம் பாரியின் ஆற்றலை. எண்ணிலடங்கா குலங்களை தன் கட்டுப்பாட்டின் கீழ் வைத்துக் காத்துவந்துள்ளான். தலைமைப்பண்பு, மரியாதை, வீரம், காதல், அன்பு, நட்பு, குலச்செருக்கு என்று அனைத்திலும் சிறந்து விளங்கும் பாரியை காதலிக்காமல் இருக்க முடியாது ஆண்களாய் இருப்பினும். 

  இத்தொடரில் வரும் பெண்களும் மிகவும் வலிமையானவர்கள். .ஆதினி, அங்கவை, மயிலா, குலநாகினிகள் என்று ஒவ்வொரு பெண்ணின் ஆளுமைகளும் ஒருங்கே அமைந்திருக்கும். கொற்றவை குத்தும், ஆடுகளுங்களையும் கண் முன் நிறுத்தியிருக்கிறார் வெங்கடேசன். நீலன், உதிரன்,தேக்கன், வாரிக்கையன் என்று ஒவ்வொரு வரும் தனி சிறப்பு. கபிலருக்கும் பாரிக்கும் நடக்கும் உரையாடலில் சொல்லாற்றல் இன்பத்தில் லயிக்கலாம். வானவியல், கோள் அறிவு என்று அறிந்துகொள்ள ஏராளமான விஷயங்கள் உண்டு. 

 சேரன், சோழன் என்று மாமன்னர்கள் படையெடுத்து வந்தாலும் வீழ்த்த முடியாத பாரியை. குருமன்னர்கள், மாமன்னர்கள், வெளி தேச வணிகர்கள் யாராக இருப்பினும் அவர்கள் வாயிலிருந்து வெளிவரும் சொற்கள் 'பாரியா அவனை நெருங்க முடியாது' என்பதே. பாரியின் மற்றொரு கவசம் இயற்கையே அரணாகப் பச்சை மலைத்தொடர்.

 அப்படிப்பட்ட வீரனை சூழ்ச்சிகளின் மூலம் சாதகமான சூழ்நிலையையும் உருவாக்கி ஒரே நேரத்தில் சேரன், சோழன், பாண்டியன் என்று மூன்று மாமன்னர்களும் பாரியை சூழ்கின்றனர். பாரியைக் காதலிக்கும் என்னால் இதற்கு மேல் நடப்பவை விவரிக்க முடியாது என்பதாலே முடிவைப் படிக்கும் முன்பே எழுதிவிட்டேன். எப்படி இருப்பினும் பாரி ஒரு பார் போற்றும் வீரன் என்பதில் ஐயமில்லை. காலத்தின் சூழ்ச்சியில் பாரியும் தப்பவில்லை என்பது கசப்பான உண்மை. என்றும் என் நினைவிலிருந்து அகலாத காதலனாய் பாரி.

Monday, March 12, 2018

ஞாபகத்தீ



      எவ்வுளவு போர்த்திகொண்டாலும்
      குளிர்கிறது உன் ஞாபகத்தினால்..


       திசைகளற்ற கடலில்
       இருக்கிறேன் உனதன்பில்


       கண்கள் அயர்ந்தாலும்
       கனவுகள் அயர்வதில்லை
   
        பருகப் பருக
        வந்துகொண்டே இருக்கிறது
        உனதன்புச்சுரபி

         குளிர்கால வியர்வையாக
         வரும் உன் ஞாபகம்.

           மேகத்தை மறந்த வானமென
           திளைக்கிறேன்

         அறிவீனங்களின் ஆரம்பம்
         அன்பு பெருகுமிடம்.



         எண்ணாமல்விட்ட
         எண்ணங்களெல்லாம்
         பின்னால் துரத்துகின்றன.


         அகண்ட இருளில்
         ஒளிர்கிறது உன் ஞாபகத்தீ.
     
                                        தனிமைக்கும் உன்                                         
நினைவுகளுக்கும்
          என்றும் ஒரு தோழமையுண்டு
          என்னை உள்வாங்கிக்கொள்ள.

         வெட்கத்தை வெட்டி
         போர்வையில் முடிந்தேன்
     
          மோகத்தை போர்திக்கொண்டு
          போர்வையை விலக்கலானேன்.


           உன் முத்தபெருக்கில்
           என் உயிர் மூச்சுவாங்கியது
           இடைகால ஆசுவாசம்
            உன் அணைப்பு.


          விழி மூடி
          உயிர் திறந்து
          ஒரே சமயத்தில்
          மேகத்திலும், காடுகளிலும்
          பயணப்பட்டேன்.

          கலையாத கனவுகளின்
          திறவுகோல்
          உன் புன்னகை.

          சிரிக்க நினைத்து
         சிதைந்த தருணங்கள்
         ஞாபகத்தின் பெட்டகத்தில்
         கனவுகளை எதிர்கொண்டு.


        ஞாபகங்களைத் திறக்காதே
           பழைய நீ தெரிந்துவிடுவாய்.

          வடுகாய் உன் தடங்கள்
          என் மேனியெங்கும்
           உனதன்பு.


          ஏங்காத மேனியெல்லாம்
           கற்களால் ஆனது
         
            சரியான சரிவுகள்
             மீளாத இரவில்.


            முத்த முடிச்சுகள்
           அவிழ்க்கையில்
           மெத்தை மேகமாகிறது.


           பார்வைகளால் ஆடைகளை
           உருவி
           மேன்புன்னகையால் மெல்ல
           கலைத்தாய்

           கரங்களால் ஆகா கிளர்ச்சியை
           சொற்கள் தரவல்லது
           சற்றும் தலைக்கனமில்லாமல்.

        எழுதாத தாளெனக்காத்துகிடந்தேன்
                                      சிறிதும் இடமில்லாமல்                                   
நிரப்பிவிட்டாய்.


         கிடைக்காத நேரம்
         கிடைத்ததால்
         கிட்டாத அனுபவம்
         கிட்டியது.
         எட்டாத துரத்திலிருந்து.

       இரவுதான் எத்துணை
       கொடுமையானது
       உணர்வுகளை மேலிழுந்து
       உடலை வருத்துகிறது.


          உன் வாசனையை
         உட்கொள்ளும் தருணம்
         உனக்கானது.


          விடியாத விடியல்கள்
           கண்டதில்
           முடியாது இடைவெளி

          சேராத இரவெல்லாம்
          இரவென்று யார்
         சொன்னது?
     

         


           



       

               






         
         


Friday, March 9, 2018

அதிபுத்திசாலிகளுக்கான பதிவு


அதிபுத்திசாலிகள் கேட்கும் கேள்வி பெரியாரே சிலை வைக்கும் முறையை எதிர்த்தார் , பிறகு ஏன் அவர் சிலையை அகற்றக்கூடாது என்பதே. இங்கு ஒன்றை நீங்கள் தெளிவாக புரிந்துகொள்ள வேண்டும் சிலை வழிபடுதல் வேறு சிலையாக இருப்பவரின் வழி நடப்பது என்பது வேறு. மரியாதை நிமித்தமாகவும், நினைவுக்காகவும் சிலை வைப்பது இதில் அடங்காது. உதாரணத்திற்கு நம் வீட்டில் மறைந்த பெரியவர்களின் புகைப்படத்தை நாம் வைத்துக்கொள்ளுதல் போல்தான் இதுவும். அப்படியே இருப்பினும் இப்பொழுது சிலை வைக்கச் சொல்லி யாரும் வலியுறுத்தவில்லை இருப்பதைச் சேதப்படுத்த வேண்டாம் என்பதே அனைவரது விருப்பமும். இன்னும் கொஞ்சம் வெளிப்படையாகச் சொல்ல வேண்டுமென்றால் சுயநலத்திற்காக பாடுபட்டு வாழ்ந்தவர்களுக்கு எல்லாம் சிலை இருக்கும் இத்தேசத்தில் சுயமரியாதை இயக்கத்தை தோற்றுவித்தவருக்கு சிலை இருப்பதில் தவறேதுமில்லை. 

இங்குத் தோழர் ஒருவரின் பதிவு நினைவுக்கு வருகிறது 'பெரியாரை பழமைவாதி என்று சொல்ல இன்னும் சில நூற்றாண்டுகள் தேவை' .

கடவுள் எதிர்ப்பார்பாளர்க்கும் , கடவுள்  மறுப்பார்களுக்கும் வித்தியாசம்  உண்டு. நாத்திகத்துக்கும் பகுத்தறிவுக்கும் வித்தியாசம் உண்டு. காந்திக்கும் கோட்சேவுக்கும் உள்ள வித்தியாசம் போன்று.

Thursday, March 1, 2018

பசி

பசி ஒரு கொடூரமான
மனிதன் இங்கு விலங்கு என்று
விளித்தால் அவை கண்டனம் தெரிவிக்கும்

அப்பசி ஒன்றையும்
விடுவதில்லை சுவாசிக்கும் காற்றைக்
கூட யாசகம் கேட்க வைக்கும்

எவ்வளவு இரத்தத்தை
குடித்தாலும் அதன்
தாகம் தணிவதேயில்லை
கடல் நீர் போல்
ஆர்ப்பரித்துக் கொண்டேயிருக்கும்

கதறல்கள் எல்லாம்
ஆனந்த இசை ஆயின
மழலைகளை பூச்சிகள்
போல் நசுக்கின

எண்ணிலடங்கா மொட்டுகளை வரிசைப்படுத்தி தன்
சுய இன்பத்தை வெளிப்படுத்தியது அக்கோரப்பசி

மனிதம் என்ற சொல்
அகராதியிலிருந்து
கிழித்தாகிவிட்டது

இரத்தம் தோய்ந்த யோனிகள் பழகிவிட்டன
தேனீர் கோப்பைப்போல்

மனிதம் மரித்து
அதன் மேல் படர்ந்துள்ள
கொடியை
வேடிக்கை பார்த்துக் கொண்டியிருக்கிறோம்
சற்றும் தயங்காமல்.