Tuesday, December 22, 2020

Dark

 Science fiction என்றாலே ஒரு த்ரில்தான் அதிலும் டைம் டிராவல் என்றால் செம ஸ்விங். Dark அப்படி மிரட்டிய ஒரு சீரிஸ். ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் ரிவில் பண்ணும் போது நமக்குக் கண்கள் வெளியே வந்துவிடுகிறது திரும்பவும் எடுத்து பொருத்திக் கொண்டு பார்க்க வேண்டியதா உள்ளது. நம் மூளையின் திறன் ஒளி வேகத்தில் இயக்க வேண்டியிருக்கிறது. முதல் இரண்டு எப்பிஸோட் வெயிட்டே இல்லை இவ்வளவு ஈசியா இருக்கிறது மோடாகத் தோன்றும். மெல்ல மெல்லப் புதை குழியில் இழுத்துக் கொள்கிறது. வெவ்வேறு வருடங்கள் கடந்த காலம், எதிர் காலம் என்று மேலும் பேர்லல் வெல்ர்ட் வேறு. ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் மூன்று அல்லது நான்கு physical existence. சந்தேகமே இல்லாமல் It's a complete labyrinth. முதல் சீசனில் வந்த காட்சிகள், டையலாக் என்று சின்ன சின்ன டிடையில்ஸ் கூட அழகா மூணாவது சீசனில் இணைத்திருக்கிறார்கள். அநியாயமான காட்சி கோர்வை. அப்படியே மூளையை ஸ்பிலாஸ் செய்தது போல். இப்படி எல்லாம் கூட யோசிக்க முடியுமான்னு.. ஏன்ப்பா ஏய் மூளையைக் கொஞ்சம் பெண்டிங் வைங்கப்பா.  ரொலர் கொஸ்டரில் ரைட் போன ஒரு ஃபில். நிச்சயம் பாருங்க செம அனுபவமாகயிருக்கும்.


The beginning is the end and the end is the beginning.


#DarkNeftlix

Breaking Bad

பெரும்பான்மையானவர்களால் ஈர்க்கப்பட்ட Breaking Bad  என்னும் Netflix series போற போக்கில் டிரக் மாஃபியாகளின் உலகின் எதார்த்தங்களை வரைந்து மிரளவைத்திருக்கின்றனர்.  Mr. Walter White என்னும் ஐம்பது வயது திறமையான கெமிஸ்ட்ரி புரொபஸர்  திடீரென தெரியவந்த கேன்சர் காரணமாக இன்னும் ஒரு வருடமே இருக்க முடியும் என்றவுடன்  கர்ப்பிணியாக இருக்கும் மனைவியும், பதினைந்து வயது மாற்றுத்திறனாளி மகனும் என்ன செய்வார்கள் என்ற அச்சத்தில் பணம் சேர்க்கும் முயற்சி எங்குக் கொண்டு போய் நிறுத்திருக்கிறது என்பதே கதை.


இத்தொடரில் வரும் முக்கிய மான கதாபாத்திரங்களின் நடிப்பு அவ்வளவு உள்வாங்கி நடித்திருக்கிறார்கள். என்னை மிகவும் கவர்ந்தவர் Gustav Fring. மிகப் பொறுமையாகக் கையாளப்படும் வார்த்தைகள் முதல் யுக்தி வரை ஆர்ப்பாட்டமில்லாமல் நிகழ்த்துவார். அந்த மிடுக்கும் பொறுமையும் அவர் இறக்கும் போதும் கூட அந்த visage மிரட்டிட்டார். அமெரிக்காவின் மற்றொரு முகத்தின் காட்சிப்பிடிப்புகள். வறண்ட உலகின் நிகழ் தடங்கள்.


வாழ்வின் ஒரு செயல் அதன் தொடர்ச்சி, ஒரு சின்ன grudge கூட கூட்டிப் போகும் தூரமும் அதற்கான விளைவுகளும் என்று யோசிக்க யோசிக்க அதீத பிரமிப்பைத் தரும் screenplay.  இவர் இப்படிச் செய்யக் கூடியவரா அல்லது இவர் இதற்குத் துணிந்தவரா என்ற படபடப்பு Skyler யை விட நமக்கு அதிகம் தொற்றுகிறது. அந்த நிதானமான திட்டமிடலும், செயல்முறையும் சாதுரியமாகக் கையாண்ட Walt character deserves  applause. குடும்பத்திற்காக என்று தொடங்கி குடும்பமே அவரை வெறுத்து கிளிஃபில் வந்து நிற்பதுதான் Breaking Bad. Highly recommended to watch.


#BreakingBad

Unbelievable

மோக முள்க்கு பிறகு ஓர் ஆங்கில க்ரைம் நாவல்.. இப்பனிக் காலத்துக்கேற்ற காக்டெய்ல். Unbelievable என்கிற இப்புத்தகம் உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டது மற்றும் Netflix ல ஒரு சின்ன தொடராகவும் வந்திருக்கு. ரேப் செய்யப்படும் பெண்களின் மன உளைச்சல் மற்றும் உடல் மொழி எவ்வாறு இருக்கிறது. குற்றமாகப் பதியப்படும் ஆவணங்களில் எத்தனை உண்மையான கேஸ் எத்தனை பொய் மற்றும் பொய் என்பதை எப்படி ஆராய்ந்து அறிகிறார்கள் என்பதை அழகா சொல்லியிருக்காங்க. இன்னும் முழுசா படிச்சு முடிக்கலை படித்தவரை its intriguing.

தொடர்ச்சி

புத்தகத்தைப் படித்தவுடன் ஒன்று புரியவந்தது மற்ற குற்றங்கள் போல் இல்லாமல் இதில் யார் விக்டீம் என்ற skepticism அதிகம் வருகிறது அதற்கான காரணம் நிறையப் பொய்யான கேஸ்களும் பதியப்படுவதற்கான காரணம். The 'Hale Warning' என்ற ஒரு விதியை அமேரிக்கா, இங்கிலாந்தில் எல்லாம் கடைப் பிடிக்கிறார்கள். Hale என்பவர் பதினேழாம் நூற்றாண்டு நீதிபதி அவர் இப்படிக் கூறுகிறார் 'rape is an accusiation is easily to be made, hard  to be proved, harder yet to be defended by the party accused, tho' never so innocent.'

  

சமயங்களில் consensual sex கூட பொய்யான குற்றமாக பதியப்படுவதினால் இக்குற்றத்தைக் கையாள்வது மிக impenetrable. ஒரு அப்பாவிக்குத் தண்டனை கொடுத்திடக் கூடாது அல்லது ஒரு விக்டிமை கைவிடக் கூடாது என்ற நிலையில் அணுக வேண்டியுள்ளது. இப்புத்தகத்தில் மேரி என்ற பெண் rape case file பண்ணுவார். அக்குற்றவாளிக்கான சரியான ஆதாரம் கிடைக்காமலும் மேரி கூறுவது சமயங்களில் பொய்யாக இருப்பது போல ஒரு தோற்றம் தருவதால். விக்டீம்மான அப்பெண்ணிற்கு நீதி கிடைக்காமல் மற்றும் false accusiation case போடுவார்கள். இதே இப்படியான குற்றங்களைக் கையாள்வதில் இருக்கும் சிரமம். உண்மையில் அக்கொடுமைக்குள்ளான பெண்களின் trauma சொல்ல முடியாத விளைவு ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு விதமாகப் பாதிப்பிற்குள்ளாகிறார்கள். சிலர் தரும் பொய்யான புகார்களால் இப்படி அப்பாவியான விக்டீம்ஸ் மேலும் விக்டீம் ஆகப்படுகிறார்கள். மட்டுமல்லாது photo collage செய்வது போல் அவர்கள் மேல் புகார் தெரிவித்து அவர்களை முழுவதுமாக உடைத்துவிடுகிறார்கள். The people who are investigating this kind of crimes should behandle this like a glass of wine with more heedful.


#unbelievable

Friday, June 12, 2020

சில நேரங்களில் சில மனிதர்கள்.

சில நேரங்களில் சில மனிதர்கள் நாவலின் நாயகி கங்கா தன் அறியா வயதில் ஏற்பட்ட சின்ன சலனத்தின் காரணமாக தன் முழு வாழ்க்கையும் தொலைக்க நேர்வது விபத்தன்று.  புனிதம், கலாச்சாரம் என்ற பெயரில் ஒரு பெண்ணின் வாழ்வை அப்படியே மென்று முழுங்கிவிட்டு இன்னும் தணியாத தாகத்தோடு அலையும் தகிப்புதான் இந்நாவலின் சாரம்.

காரில் லிப்ட் கொடுத்தவருடன் தன்னை இழந்து வீடு திரும்பும் கங்காவை அவர் அம்மாவும், அண்ணண்ணும் அடித்தும், திட்டியும், அசிங்கப்படுத்தி அவள் அண்ணன் வீட்டை விட்டு விரட்டிவிடப் பெண்ணுக்காக அம்மாவும் உடன் வந்துவிடுவார். அவள் அம்மாவின் ஒன்று விட்ட அண்ணன் வெங்கடாசலம் என்ற வக்கீல் வெங்கு மாமா அவளைப் படிக்க வைப்பார் ஒரு வகையில் அது அவளுக்கான வடிகாலாக அமைத்துக் கொடுத்ததில் வெங்கு மாமா செய்தது மிகப் பெரிய உதவி. இருப்பினும் அவரிடம் இருக்கும் அந்த ப்பர்வர்ட் தனக்கான நேரம் வேண்டி காலைச் சுற்றும் பூனையைப் போன்று கங்காவை விட்டு விலகமாட்டார். இது ஒரு வித மனிதனின் மனநிலை மேன்மை உள்ளடங்கிய அதே நேரத்தில் இப்படியான சில ப்ளித்திக்களும் ஒருங்கே அமையப் பெற்றது.

மனிதர்களின் மனோநிலையும் அதற்கு எதிரான தர்க்கமும் நாவலின் அனைத்து இடங்களிலும் அலையடித்துக் கொண்டேயிருக்கும். இந்நாவலே இங்கு எது தர்க்கமென்று தர்க்கத்தை கூண்டிலேற்றி வினா எழுப்புவதேயாகும்.  அவளின் மாமாவிடம் உரையாடும் பொழுது அவர் சொன்னது.. 'You can be a concubine to someone. But, not a wife to someone  அப்படி நீ ஒதுங்கின்டா நீ கெட்டாலும் நம் தர்மங்களையும் சாஸ்திரங்களையும் கெடுக்காத புண்ணியம் உனக்கு உண்டு '. எவ்வளவு ஒரு குரூரமான மன நிலை இது. அவள் எதோடும் சேராமல் காலத்தின் கண்களை ஊற்று நோக்கி தனக்கென்று ஒரு வரையறைக்குள் கடந்து கொண்டிருக்கையில். ஆர்.கே. வி என்ற எழுத்தாளர் அப்படியே அவளின் கதையை அக்னி பிரவேசம் என்ற பெயரில் கதையின் மிக முக்கியமான விடையம் மற்றும் திருப்பு முனையாக அக்கதையின் முடிவை மட்டும் மாற்றி அமைத்திருப்பார். அதாவது கங்காவின் அம்மா அவ்வுண்மை தெரிந்தவுடன் அதே அடி, திட்டும் உடன் தன்னை ஆசுவாசப்படுத்திக்கொண்டு மகளை அணைத்து ஆறுதல் சொல்லி அவளின் தலையில் தண்ணீரைக் கொட்டி பாவம் கழிந்துவிட்டது இச்சம்பவத்தை ஒரு விபத்தெனக் கருதிக் கடந்துவிடு என்று சொல்வதுதான் எத்தனை உன்மத்தம். இக்கதையைப் படித்துவிட்டு இதைச் செய்யத் தவறிய தன் அம்மாவின் மேல் கோபம் கொண்டு அப்புத்தகத்தை அவள் அம்மாவின் மேல் எறிந்து சென்று தன்னிலை குளத்தில் இறங்கி நீந்துவாள். வெங்கு மாமா வந்ததும் தன் குற்ற உணர்ச்சிகளையும் குமுறல்களையும் காக்கைக்கு இரைக்கும் பருக்கைகள் போல் இரைப்பார் கங்காவின் அம்மா. அதற்கும் அதே புராணங்களை அடுக்கி வீட்டு நாயை சங்கிலியில் கட்டுவதை போன்று அவரின் நியாயத்தைக் கட்டுவார். இறுதியில் 'அவளுக்கு அவ்வளவு சமத்து இருந்தால் அந்த அவனையே தேடி கண்டுப்பிடிச்சு கட்டிக்கொள்ளச் சொல்' என்று கூறும் போது கங்கா வாசலில் நுழைவாள்.

அதன்படியே காரில் வந்த பிரபுவைத் தேடிப் பிடித்தும் விடுவாள். ஆனால், அவருக்குக் கல்யாணம் ஆகி கல்லூரியில் படிக்கும் ஒரு பெண்ணும் உண்டு என்பதை அறிந்த கங்கா. பிரபு வழக்கமான பணக்கார மகனின் அத்தனை கேடுகளையும் உடைய உடைந்தும் போன குழந்தையின் பொம்மை. தன்னால் கங்காவின் வாழ்க்கை இப்படி ஆனதை கண்டு மிக வருத்தப்பட்டு எப்படியாயினும் அதைச் சரியாக்கி விட வேண்டும் என்று துடிப்பது நீரில்லா மீனின் உணர்வு. அவர்களின் பெரும்பாலுமான உரையாடல் நல்ல ஆங்கிலம் கொண்டது. ஜெயகாந்தன் அதில் நம்மை உருக்கி உலோகம் செய்கிறார். கங்கா குறைந்த பட்சம் அவரின் ஆசை நாயகி என்ற பெயரளவிலாவது வாழ்ந்துவிடுவது என எண்ணுகிறாள். அதற்கும் இவர்களின் சாஸ்திரங்கள் ஃபிலைட் பிடித்து வந்து சண்டையிடும்.

பிரபுவும் தனக்கான அன்பை வேண்டி சடுதியில் இருப்பார் அவரின் வாழ்வில். உண்மையில் பிரபு ஓர் அரவணைப்புக்கு ஏங்கும் குழந்தை. அவரின் சிறந்த குணங்களை குடிப்பழக்கம் மறைக்க முனைப்படும். சருகு பச்சையத்திற்கு ஏங்குவதாய் அவரின் ஆசைகள். வாழ்க்கையில் பெரிய பிடிமானமில்லாமல் மஞ்சுவே அருமருந்தாக வாழ்வார். ஆகையால், கங்காவின் நேசம் அவருக்கும் ஆதர்ச தோள்தான். இதில் பிரபுவின் மகளாக வரும் மஞ்சுவிற்கு இருக்கும் பக்குவமும், புரிதலும் வியக்கும் நல்லுணர்வு. ஏதோ ஒரு நிலையில் இவர்களின் உறவை மஞ்சுவிற்கு விளக்க நேர்வதும் அதை அவள் கையாளும் விதமும் அத்துணை லாவகம். இப்படத்தை வெங்கு மாமாவிடம் வெளியிடத் துடித்த கங்காவின் அம்மா கொட்டித் தீர்ப்பார். அவரின் போக்கில் இதையும் சரியல்ல என்று முடிப்பார். அவர் முன்பே கூறியதுபோல் அது ஏன் நானாக இருக்கக் கூடாது என்ற அவரின் ஆவலாதியையும் தண்ணீர் ஊற்றி அணைப்பாள். இருப்பினும் அவருக்கு ஒரு சில விஷயங்களில் இருக்கும் புரிதலும், மேன்மையும் கங்கா வணங்கச் செய்யும் ஒன்று. அவரே 'I would like to meet that gentleman' என்கிறார். அச்சொல் அந்த அவரை ஜென்டில்மேன் என்று கூறுவது அவரின் நல்விடையங்கள்.

ஆர். கே. வின் வழியாக வரும் ஒரு விடோவரின் திருமண வரனை ஏற்கச் சொல்லி கங்காவிடம் கேட்பது அவளுக்கு ஒரு நல்வாழ்க்கை வேண்டும் என்பதைத் தாண்டி இப்படியான அவள் விருப்பப்பட்ட இவ்வாழ்க்கையை விட்டோழிந்து இவர்களின் புனிதத்திற்கு மஞ்சள் நீராட்டு செய்ய வேண்டுமென்பதே. அப்படி அவரை நாடிச் செல்கையில்தான் கங்காவின் அண்ணனிற்கு தெரிய வரும் பிரபுவின் மனத்தூய்மை. இந்த நாவலை புதியதாகத்தான் நான் கிளாசிக் என்று சொல்ல வேண்டியதில்லை. 1970திலிருந்து பலர் சொல்லி உளமகிழ்ந்திருப்பர். இந்நாவலின் வாதி பிரதிவாதி இரண்டுமே தர்க்கம்தான். சாகித்திய அகாதமி விருது பெற்ற இந்நாவலின் ஸ்பரிசத்தை ஒருமுறையாவது உணருங்கள்.

#ஜெயகாந்தன்

பிரபாகரனின் போஸ்ட் மார்ட்டம்

பிரபாகரனின் போஸ்ட் மார்ட்டம் நாவல் பிரபாகரன் என்னும் மருத்துவ மாணவனின் தற்கொலையிலிருந்து தொடங்குகிறது. ஒருவர் தற்கொலை செய்வதற்கான சாத்திய கூறுகள் என்று எந்தவரையறையும் யாரும் வகுக்க முடியாது என்பது தற்கொலையை எப்படித் தவிர்க்க முடியவில்லையோ அதே அளவிற்குத் தவிர்க்க முடியாத உண்மை. பிரபாகரனின் நண்பர் என்று அறியப்பட்ட கதைசொல்லிதான் இந்நாவல் முழுவதும் நம்முடன் உரையாடுகிறார். சமயத்தில் நாமே அவராக உணரப்படுவோம்.

இக்கதைசொல்லி பிரபாகரனின் அதே கல்லூரியில் படிக்க நேர்வதால். தற்கொலைக்கான காரணங்களை அறியத் தூண்டப்பட்டு அதை முனைகிறார். அவர் கேட்டறியும் முதல் நபர்  பிரபாகரனின் நெருங்கிய நண்பர் என்று அறியப்பட்ட சதாசிவம். மருத்துவ மேல்படிப்பில் தான் அடைய நினைத்த கல்லூரி கிடைக்காததால் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று அவர் அதை நிறுவ முற்படுவார். பிரபாகரன் அதிபுத்திசாலி, கொஞ்சம் எல்லோரும் பொறாமைப் படும் அளவிற்கு உயர்ந்தவர் என்பதாலே அவர் இறப்புக்கான கிளைக்கதைகள் ஏராளமாக விரவிக்கிடக்கும். இப்படியான கதை சொல்லித் தேடலில் பல்வேறு தரப்பட்ட நபர்கள் அவர்களின் புனைவு திறனையும் கொஞ்சம் உண்மையும் எடுத்துரைப்பர். வெகு சிலர் தனக்குத் தெரிந்த உண்மையை மட்டுமே கூறுவர் அதில் அவர்களின் ஒரு குற்றவுணர்வு ஜுவாலை தெரியும். இருப்பினும் அதை அவர்களாகவே ஏற்றுக்கொண்டு நொந்துக் கொள்ளும் ஜீவன்கள்.

நாவலின் தடம் மனித மனங்களின் வெளி. கதைசொல்லியின் மனமாகட்டும், துப்பு கொடுக்கும் நலன் விரும்பிகள்! ஆகட்டும் அப்படியே மனித மனங்களை போஸ்ட் மார்ட்டம் செய்து நம் முன் வைக்கிறார் மயிலன். கதை சொல்லியின் மனப்போராட்டம், உணர்வுகள், மனித உணர்வுகளின் விவரணை என்று அனைத்துமே ஒரு deep anthropology study. ஃப்ராய்ட் புத்தகத்தில் படித்த இச்சொல் மிகக் கச்சிதமாக இருக்கும் என நம்புகிறேன். 'நனவிலி மனதின் உளபகுப்பாய்வு'. அப்பட்டமாக மனித மனங்களின் உளபகுப்பாய்வே இந்நாவல்.

நம்முடன் இருக்கும் நபர் பொதுவில் நண்பர், உறவினர் ஆவர். அவர்களில் சிலர் எனப் பெரும்பான்மையானவர்களின் எந்த விதத்திலும் உடனிருப்பவர் உயர்ந்து விடக் கூடாது என்று அவர்களுக்குள் ஒரு அலாரம் அடித்துக்கொண்டே இருக்கும். அதை மீறி முன் வந்தால் எதாவது பழிச்சொல்லை அவசரமாகத் தேடுவர். நாவலின் மிகச்சிறந்த வரி //தனக்குள் சரிந்து விழும் தன்னுடைய பிம்பத்தைத் தூக்கிப்பிடிக்க, அடுத்தவனின் ஆளுமையை அடியோடு நசுக்க வேண்டியிருக்கிறது// இதுதான் நாவலின் சாரமும் கூட.

மருத்துவத்  துறையில் நிகழும் அத்துணை அரசியல், வஞ்சகம், அதிகாரம், இன்னும் பிற இத்தியாதிகளை ஒவ்வொரு குப்பியாக அடுக்கியிருக்கிறார் எழுத்தாளர். மயிலனாக வரும் டிப்பார்ட்மென்ட் ஹெட் தன் அதிகார ஆளுமையின் வேரில் அனைவரையும் முறித்து தன் அகங்காரத்தை நிலை நாட்டிக் கொள்வதெல்லாம் சாடிச லயிப்பு. மருத்துவத் துறையின் நிஜ உலகத்தை வடித்ததின் பெயரில் இந்நாவல் அதற்கானத் தனி முத்திரையைப் பதிக்கிறது என்பதில் எந்த ஐயமுமில்லை. ஆனால், வெறும் மருத்துவ உலகின் நூல் என்று சுருக்கினால் அதை உடனடியாக வன்மையாக எதிர்ப்பு தெரிவிப்பேன். ஒரு நல்ல புத்தகம் இன்னொரு நல்ல புத்தகத்தை நினைவுபடுத்தும் என்பர். அவ்வாறாக மனித வாழ்வை, வாழ்வின் முரண்களை, அதில் அவர்களின் நிலைப்பாட்டை என்று படிக்க நேர்கையில் சுந்தர ராமசாமியின் ஜே ஜே சில குறிப்புகளில் அவர் அடுக்கும் கேள்விகளின் பக்கங்கள் நினைவுத் திரியிலிருந்து எரியத் துவங்குகிறது.

செவிலியர்கள் நாஸியா மற்றும் லீமா இருவரும் வலிந்து கூறும் புனைவில் அவர்கள் தங்களுக்கு ஒரு ஆறுதலைத் தேடி தன் பழிவுணர்வை கழிக்க முற்படுவது ஒரு பொதுப் புத்தியின் வெளிப்பாடு. இறந்தவர் எப்படியும் சாட்சி சொல்லப்போவதில்லை என்ற கூடுதல் நம்பிக்கை. இவர்களின் சப்பாஷனையை எழுத்தாளர் இப்படி நச் சென்று விளக்குகிறார். // ஒருவர் சொல்லும் உண்மையை நாம் ஏற்காமல் விடுவதைவிடவும், அவர் வலிந்து சோடித்துச் சொல்லும் ஒரு பொய்யை நாம் நிராகரிக்கும்போதுதான்,அவர் அதிகம் சீண்டப்படுகிறார். //

அன்வர் பிரபாகரனின் நண்பர் பிரபாகரனின் இக்கட்டான சூழ்நிலையில் உடன் பயணித்தவர். ஓரளவு பிரபாகரனைப் புரிந்து அவனை அரவணைத்துச் சென்ற ஒருவர். பிரபாகரனின் தற்கொலைக்குக் காரணம் குடும்ப பிரச்சனையா, தவறவிட்ட உயர் படிப்பிற்கான கல்லூரியா, காதலா, அதிகார மையத்தின் நையப்புடைப்பா என்று நீளும் பட்டியலில். அன்வர் தானாகவே கன்ஃபஸ் செய்கிறார் நான் அவனைத் தவறவிட்டேன் என்ற குற்றவுணர்வின் வெளிப்பாடாக மதத்தை இறுக்கப் பற்றி இறுகிப் போகிறார். மதம் வலிந்து இவ்வாறான மனிதர்களை ஏற்று தன்னாலானவரை ஆற்றுப்படுத்த முயல்கிறது. என்னைப் பொறுத்தவரை ஒருவனின் நம்பிக்கையை உடைப்பதில் அதிக பங்கு மதத்திற்குண்டு. தன்னளவில் தோய்ந்து தோற்றுப்போனதாக அன்வர் நினைக்கிறார். கதைசொல்லிச் சொல்வதைப் போல் பிறர் மாதிரி அடுத்தவரை கைகாட்டாமல் தன்னை கடிந்துகொள்ளும் மாண்பு அன்வருக்கு இருந்தது ஒரு வித நல்லுணர்வு.

தற்கொலை பற்றிய குறிப்புகளைக் கேட்டறிகையில் அவர்களின் உடல் மொழி, குரல், ஆதாரம்,சாதுரியம் என்று ஒவ்வொன்றாக விளக்கி அறிய முற்படுவது ஒரு விசாரணையின் மிடுக்கை அங்கே கொண்டு வந்துவிடுகிறது. டூ மச் ரிஃப்ரன்ஸ்சாக தெரியலாம் நான் இப்பொழுது சொல்வதும் இருப்பினும் இணைக்கிறேன். மைண்ட் ஹெண்ட்டர் என்ற நெட்ஃபிலிக்ஸ் தொடரில். இவ்வாறான குறிப்புகளை வைத்து அவர்களின்(குற்றவாளிகளின்) மன ஓட்டங்களை அறிவர் அக்காட்சிகளும் கண்களில் விரிந்தது.  இவ்வாழ்க்கை எப்பொழுதும் அதுவும் நொடிந்த தருணங்களில் தேடுவது ஆதுர தோள்களையும் தனக்கான காதுகளையும். இவையிரண்டும் புறக்கணிக்கப்படும் போதுதான் இம்மாதிரியானவர்கள் உலகையும், மனிதர்களையும், வாழ்வையும் புறக்கணிக்க நினைக்கின்றனர். நாவலில் பிரபாகரன் இறப்புக்கு முன் அவருடன் இருந்த நண்பனின் தற்கொலை பிரபாகரனுக்கு முன்பே தெரிந்தது என்பதும் அதே போன்று பிரபாகரனின் தற்கொலை அன்வருக்கும் முதலே ஒரு உணர்வு இருந்தது என்பதுதான் நாம் இங்கு ஆழ்ந்து, ஆய்வுக்குள்ளாக வேண்டிய விடையம்.

குறைந்தபட்சம் ஒருவர் உடைந்த நிலையிலிருக்கும் போதாவது நமது வன்மங்களையும், ஆற்றாமை களையும் ஒதுக்கிவிட்டு அவர்களுக்குச் செவி கொடுத்து பொய்யாகவெனும் ஒரு அன்பைப் பிரசவியுங்கள் அவர்களின் கரங்களை இறுக்கமாக அணையுங்கள் அவ்வுயிர் பிழைத்துலவட்டும்.

Such a sagacious writing. ❤️
வாழ்த்துகள்
#மயிலன்ஜிசின்னப்பன்
#பிரபாகரனின்போஸ்ட்மார்ட்டம்

இன்னும் ஓர் இரவு

கற்றது தமிழ்ப் படம் எப்பொழுதும் நினைவிலிருந்து அகல்வதில்லை. காட்சிகள், பாடல்கள், வசனம் என்று. முன்பே எழுதியது போல் ராமின் மிகச் சிறப்பான படமாக இருக்கும் எப்போதும் அவர் எடுக்கப் போகும் படங்கள் உட்பட.

இப்படத்தில் யுவன் இசையையும் காட்சிகளைப் பிரிக்க இயலாது அப்படி ஒரு இசைவு உண்டு. அனைத்து பாடல்களும் அருமை ஒவ்வொன்றும் ஒவ்வொரு மிதவை நிலை. இக்கதையை மூலத்தை எதனால் ஒரு மனிதன் இப்படி வன்மமாக மாறுகிறான். எதற்கு சமூகத்தின் மேல் இத்தனை கோபம் வருகிறது? என்னும் இப்படத்தைப் புரிந்து கொள்ள முடியாமல் இருப்பவர்களுக்கு இருக்கும் அத்தனை கேள்விகளுக்கும் இந்த ஒரே பாடலில் விடை கிடைக்கும் வரிகள் மற்றும் இசை அம்மனிதனின் மனரேகையின் ஓட்டத்தை நகலெடுக்கும்.

அப்பாடல் இன்னும் ஓர் இரவு இன்னும் ஓர் நினைவு என்ற பாடல். நா. முத்துக்குமார் வரிகளில் வாழ்க்கை விவரணை. புதுப்பேட்டையில் ஒரு நாளில் வாழ்க்கை பாடல் போன்று இவ்விரு பாடல்களுமே வாழ்க்கை வண்ணமெனக் குழைத்து வைத்த குழந்தை தன் முன் பரப்பி வைத்திருக்கும் வண்ண காகிதங்களாய் அவ்வளவு அழகா எழுதியிருப்பார் நா. முத்துக்குமார். இப்பாடலைக் கேட்கும் போதெல்லாம் அவ்வாழ்க்கையின் சோகம் வந்து அப்பிக் கொள்ளும்.

முழு வரிகளையுமே தர வேண்டி வரும் போல.

//போய் பார்க்க யாருமில்லை
வந்து பார்க்கவும் யாருமில்லை
வழிப் போக்கன் வருவான் போவான் வழிகள் எங்கும் போகாது//

யாருக்குமே இல்லை என்பதின் வலி

//காலடி சப்தம் எழும்பும்வரை
குப்பை மேட்டில் படுத்திருப்பேன்
கடைசியாய் சிரித்தது எப்போது
ஞாபகம் இல்லை இப்போது//

சிரிப்பை மறந்த வாழ்க்கையின் ரணம்

//நதியில் விழுந்த இலைகளுக்கு
மரங்கள் அழுவது கிடையாது
வேரில் தீயை வைக்கும் வரை
வேதனை அதற்குப் புரியாது//

எத்தனை அப்பட்டமான வரிகள்

//உயிருடன் இருப்பது இப்போதெல்லாம்
வலித்தால் மட்டுமே தெரியும்
உன்னுடன் நானுமில்லை என்பது
விழித்தால் மட்டுமே புரியும்//

இறந்தகால வாழ்வின் நினைவே நிகழ்கால நகர்தல் எட்டாத கனவின் வேதனை. இதைத் தொடர்ந்து வரும் வரிகளில் தன்னை நிராகரிக்கும் சமூகத்தின் மேலான கோபம், வறுமை, எதார்த்தத்தை மீறும் இடத்தை அத்தனை எதார்த்தமாக எழுதி இசைத்திருப்பர். கொண்டாடும் காதலிக்குப் பிடித்த ஒன்றை வாங்கிக் கொடுக்க முடியாத கையறுநிலையின் தணல் என்று முழு பாடலும் வலி நீவல். சந்தேகமே இல்லாமல் நா. முத்துக்குமார் தமிழ் சினிமாவின் மாபெரும் இழப்பு. கதைத்துக்கொண்டே இருக்கலாம் அவரின் வரிகளை.

#நாமுத்துக்குமார்

Paatal lok

Those who are all having prime video or Telegram do watch Paatal lok series. குழந்தைகள், கர்ப்பிணிப்பெண்கள் மற்றும் பஞ்சு மிட்டாய் நெஞ்சம் கொண்டவர்கள் தவிர்த்துவிடவும்.

இங்கு இரும்பு பெண்மணியைப் பற்றி நல்லவிதமாக நெட் சீரியல் எடுத்ததற்கே கொஞ்சம் எதிர்ப்பு கிளம்பியது. Paatal lok என்ற இந்த பிரைம் சீரியல் அதுவும் வடக்கே வெளியாகியிருக்கிறது ஒரு நல்ல விடையம். இந்துத்துவா, பீப், தலித், முஸ்லிம் அடக்குமுறை, பல குற்றங்களுக்கு ISIS மற்றும் பாக்கிஸ்தான்தான் காரணம் என்று முடிப்பது என தீவிர அரசியல் பேசியிருக்கிறது. நிச்சயம் பார்க்க வேண்டிய ஒரு தொடர். தவறாதீர்கள். முகத்தில் தெறிக்கும் இரத்தத்தை வழித்துவிட்டுதான் காத்திருக்க வேண்டியுள்ளது அடுத்த சிசன்க்கு.

ஜெய்ஹிந்த் 💪💪

HBDRaja

இளையராஜாவின் பாடல்களைக் கேட்காமல் தமிழ் நாட்டில் வாழ்வது அரிது. அவரின் இசை நம் நாளங்களை மலர்களைப் போன்று கோர்க்கவல்லது. பெரிதாக இசை ஞானம் ஏதுமில்லை என்றாலும் பெருமளவில் ரசிக்கத் தெரியும். பொதுவாகவே ஒவ்வொரு பாடல்களுக்கும் ஒவ்வொரு நினைவுகளுண்டு. அந்த இசை காதில் விழுகையில் கொடியை உருவுவதைப் போன்று நினைவுகளை உருவி எடுக்கலாம்.

சமயங்களில் ஒரு சில இசைக்கு நல்ல மணமுண்டு. தென்றல் வந்து தீண்டும் போது என்ன வண்ணமோ என்ற பாடலில் துவக்கத்தில்  வரும் அந்த ஆலாபனை நம் உடம்பிற்குள் இருக்கும் ஒவ்வொரு செல்லிலும் பூ பூ பூக்க வைக்கும். அப்படியே கேட்டபடியே மரணிக்க இசைய முடியும். மயில் போல பொண்ணு ஒன்னு பாடலில் அப்பாடலின் இசையும் பவதாரணியின் குரலும் குழைந்து நம்மைக் குலையவைக்கும்.

பெண்களின் உணர்வை வருடும் பாடல்களாக இந்த மின்மினிக்கு கண்ணில் ஒரு மின்னல் வந்தது, ராசாவே உன்னை நம்பி, தாலாட்டும் பூங்காற்று நானல்லவா, என்னைத் தொட்டு அள்ளிக்கொண்ட மன்னன் பெயரும் என்னடி, மாலையில் யாரோ மனதோடு பேச, சற்று முன்பு பார்த்த என்று இப்பாடல்கள் யாவும் பெண்களின் மனநிலை பிரதி. அவர்களின் காதல் லயிப்பை, ததும்பும் உணர்வை அழகாக இசைத்திருப்பார் ராஜா. இப்படி இன்னும் நிறைய நிறையப் பாடல்களை நமக்களித்த இளையராஜா நம் நிகழ்கால அதிசயம்.

#HBDRaja

Wednesday, April 29, 2020

குருதி ஆட்டம்

வேல ராமமூர்த்தியின் குற்றப்பரம்பரை அடுத்து குருதி ஆட்டம் படித்தேன் இக்கதைகளில் வரும் மனிதர்களின் பாசாங்கற்ற வாழ்வு, குருதியை நீரென அள்ளித் தெறிக்கும் அலட்சியமான வீரம் என்று அவர்களின் எதார்த்தம் வெகுவாக நம்மை ஈர்த்து அவர்களின் அரிவாள் மேல் இரத்தம் என உறையச்செய்கிறது. கட்டுக்கடங்காத வீரத்தின் ஆற்றலைக் கொடுத்த  வாக்கிற்காக நேர்த்திக் கடன் காசாக முடிந்து கொள்ளும் குற்றப்பரம்பரையில் வரும் வேய்யன்னா மனதில் வேல் கொம்பு பாய்த்து அப்படியே உள்ளிறங்குகிறார்.

குற்றப்பரம்பரை என்ற சட்டம் வெள்ளையர் காலத்தில் குறிப்பிட்ட இனத்தவருக்கென்று இயற்றப்பட்ட  சட்டமாகும். காடுகளில் விலங்குகளை வேட்டையாடி உண்டு வாழ்ந்து வந்த இனம் ஊருக்குள் வந்த பின் செய்வதறியாது களவு தொழிலில் ஈடுபட்டனர். அவர்களைப் பல் வேறு வழிகளில் ஒடுக்க நினைத்து அதில் ஒன்றாக இச்சட்டம். உண்மை என்னவென்றால் திருட்டை விட அவர்களின் வீரமும், ஆற்றலும் ப்ரிடிஷ் அரசாங்கத்தை அச்சுறுத்துவதாக இருந்தது. குற்றப்பரம்பரை நாவலில் ஒரு வசனம் வரும். "எத்தனை கோழைகள் வேண்டுமானாலும் உயிர் வாழ்ந்து கொள்ளட்டும். ஆனால், ஒரு வீரனையும் விடக் கூடாது". என்பதே அவர்களின் கோட்பாடாகவிருந்தது. எனவே, இச்சட்டத்தின் எப்பொழுது வேண்டுமானாலும் கைது செய்யலாம் மற்றும் பிணையிலும் வெளியே வர முடியாது. குறைந்தபட்சம் வாரம் ஒருமுறையாவது கச்சேரிக்கு வந்து கையொப்பம் இடவேண்டும் அக்குறிப்பிட்ட சமூகத்தினர் மட்டும்.

வேள் பாரியில் வரும் பறம்பு மலை வீரர்களுக்கு இணையான வீரத்தைக் காண முடிந்தது இவர்களிடத்தில். வேல ராமமூர்த்தியின் மேல் ஒரு விமர்சனம் உண்டு அவரின் கதைகள் சுயசாதி பெருமையைப் பேசுகிறது என்று  அது ஒரு வலதுசாரி மனோபாவம். அதனால், அதைப் புறம் தள்ளி அவரின் எழுத்துக்குள் இறங்குவோம். பட்டவர்த்தனமாகவே அவரின் கதைகளில் அச்சமூகத்தின் அனைத்து நிலையும் விளக்கப்பட்டுள்ளது.

பவா செல்லதுரை அவர்கள் ஒரு கதையாடலின் பொழுது சொன்னார். உண்மையில் இப்படியான கதைகளின் மூலம் நம் சமூகத்தை இழிவு படுத்துகிறான் என்று அவரை கொல்ல அவரின் சமூகத்தினரே முயன்றனர் அதனால் கொஞ்சக் காலம் ஊர் பக்கமே போகாமலிருந்தார் என்றார். களவுக்கு ஆண்கள் போன பின் இரவிலே பெண்கள் மசாலா அரைக்கத் தொடங்கிவிடுவார்கள் காரமும், மணமும் எழுத்தின் வழியே நம் நாசியை அடைந்து நாவில் உமிழ் நீர் சுரக்கும். மதயானை கூட்டம் திரைப்படத்தில் அப்படியே பொருந்திருப்பார் வேல.ரா அந்த செருக்கும் மிடுக்கும் என மிரட்டியிருப்பார். இப்படியான மண்ணின் கதைகள் அவ்வப்போது தேவைப்படுகிறது நம்மை மீட்டுருவாக்கம் செய்துகொள்ள.

நோக்கியா 1100

செல்போன் வந்த ஆரம்ப காலத்தில் நான் பள்ளியில் படித்துக்கொண்டிருந்த நேரம். அப்பொழுது நோக்கியா 1100 தான் எங்க குல தெய்வம். பட் எல்லாரிடத்திலும் போன் கிடையாது.  வீட்ல பொதுவாக இருக்க போன்தான் யூஸ் பண்ணணும்.

யாருகிட்டயிருந்தும் மெசேஜ் வருவதில்லை  என்பதால் என் கசின் போன் எடுத்து எனக்கு நானே மெசேஜ்  அனுப்பி திரும்ப என்கிட்ட இருக்கும் போனை எடுத்து நானே ஓப்பன் செய்வதெல்லாம் அப்படி ஒரு பூரிப்பு . அவன்(கசின்) அசிங்கமா திட்டிட்டு இருப்பான் 'இதெல்லாம் ஒரு பொழப்பான்னு' அதெல்லாம் எங்க கேட்டு கிட்டு.

இப்ப  என்னடான்னா ஓயாம நோட்டிப்பிகேஷன்ஸ் வருது. வாட்ஸ் அப், மெசன்சர், ஃபேஸ் புக் எல்லாத்திலும். கர்மம்  இதையெல்லாம் யாரு பார்ப்பதுன்னு வாட்ஸ் ஆப் எல்லாம் அப்படியே கிளேயர் சேட் கொடுக்கிறது. இதிலிருந்து தெரிய வருவது  என்னவென்றால் அறிமுகமும்,  அதிகமின்மையும் தான் ஈர்கும். அப்புறம் எல்லாமே பொண்டாட்டி பழசான கதைதான்.


சுட்டி டிவி நிகழ்ச்சி

சுட்டிவியில் ஒரு ப்ரோகிராம் டாக்கிங் டாம் அப்படின்னு. அதில் அனைவரும் ஒரு போட்டியில் பங்குபெறுகிறார்கள் பாட்டோ, பேச்சோ எதோ ஒன்று. அந்நிகழ்ச்சி நடப்பதற்கு முன்பு நிகழ்ச்சியின் ஒருகிணைப்பாளர் பேசுகிறார். 'இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வெற்றி பெறுபவர்களுக்கு பரிசும், தோற்பவர்களுக்கு கிண்டல்களும் வழங்கப்படும்' என்று. என்ன ஒரு அப்பத்தமான statement இது குழந்தைகள் பார்க்க கூடிய நிகழ்ச்சியென்றும் இல்லாமல். தோல்லியுற்றால் கிண்டல் என்பது அக்குழந்தைகளை வெகுவாக வேற மனநிலைக்கு கொண்டு செல்லும். உண்மையில் வெற்றி பெறுவது அல்ல வாழ்க்கை. தோல்விதான் வாழ்க்கை. தோல்வியை பழகமால் வாழ்க்கையை வாழவே முடியாது என்பதே நிதர்சனமாக இருக்கும் பொழுது இது தவறான முன்னுதாரணம்.

நாம் பார்க்கும் திரைப்படத்தை அவர்களும் பார்க்கிறார்கள் அதில் திசைத்திரும்பாத குழந்தைகளாயென்றால்.  நாம் பார்க்கும் திரைப்படத்தை அவர்களும் உடன் இருக்கிறார்கள் என்றால் அதில் வரும் தவறான தகவல்களை பிரித்து சொல்ல வேண்டும். சரியான வற்றையும் எடுத்து சொல்ல வேண்டும். எனக்கு இச்சமூதாயத்தின் மேல் இருக்கும் கடமையும், பயமும், நெருடலும் நிச்சயம் குழந்தையும் தெரிந்தே வளர வேண்டும் என்று நினைக்கிறேன்.எதை எப்படி எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதை தெளிவுபடுத்த வேண்டும்.

 மற்றொரு கவனிக்க வேண்டிய விஷயம் என்ன வென்றால் இத்திரைப்படங்களை விட கார்ட்டூன் சேனல்கள் மிகச்சுலகமாக அவர்களை கவர்கிறது. அதனால் தான் அதில் இன்னும் அதிக கவனம் செலுத்த வேண்டும்.அப்படியே திரைப்படத்தை தவிர்த்து குறைந்த பட்சம் செய்தி சேனல்கள் பார்த்தாலே போதும் அதைவிட  அதிகமாக வன்முறையை கடத்திவிடலாம் அப்பட்டமாக. எதுவாக இருப்பினும் பெற்றோர்கள் குழந்தைகளுடன் உரையாடுவது மிக முக்கியம்.


ஓஷோ - கதை

ஓஷோவின் புக் படிச்சேன் இங்கிலிஷ்ல. அதில் ஒரு கதை வந்தது. ஒரு கப்புல் தங்களுடைய அன்றாட வாழ்க்கையில் வரும் பிரச்சனையை எதிர் கொள்ளச் சிரமப்பட்டு ஒரு மகானை நாடுவர். அதாவது கணவர் மட்டும் மகானிடம் சென்று தீர்வை கேட்டு வருவார். அதை மனைவியிடம் சொல்லி implement செய்து வெற்றியும் பெற்று விடுவர். இந்த கப்புலுக்கு வேறு ஒரு முக்கிய பிரச்சனையும் உண்டு. சரியான IC இல்லை என்பது.

மனைவிக்கு மேற்படி பிரச்சனை சரியானது போல். இதுவும் சரியாகிடாதா என்ற அவா. அதனால் கணவனிடம் இதற்கும் மகானிடம் தீர்வு கேட்கச் சொல்லி அனுப்புவார். சரி கழுதை இதையும் கேட்போம் என்று கணவர் சென்று விடையையும் பெற்று விடுவார். அதன் பிறகு இருவரும் அதிமுக்கியமாக மனைவியும் சந்தோஷமாக இருப்பர்.

இருப்பினும் மனைவிக்கு இது எப்படிச் சரியானது அப்படி என்ன சொல்யுஷன் அல்லது மந்திரம் சொல்லிருப்பார் அதைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற துடிப்பு. கணவர் குளிக்கையில் எதோ முணுமுணுப்பது கேட்கும் அதை மனைவி ஒட்டுக் கேட்பார். அந்த கணவர் என்ன சொல்லிக்கொண்டிருப்பார் என்றால்.

'she's not my wife, she's not my wife' repeatedly.

Friday, April 24, 2020

தீனா - பாடல்கள்

அக்குபஞ்சர் நீடிலா
துருகி சிக்கன் நூடுலா
அன்பே ஆடை கொஞ்சும்
உந்தன் இடையிலா...

தீனா படத்தில் வரும் காதல் வெப்சைட் ஒன்று பாடலின் வரிகள் எழுதியவர் சாட்சாத் வாலியேதான்.. ஒவ்வொரு வரிக்கும் டெக்னிக்கல் அப்டேட்வரை கொடுத்திருப்பார்.. யுவன் இசை அப்படியே துள்ளலில் வைத்திருக்கும். தீனா படத்தில் அனைத்து பாடல்களும் ஹிட். அப்பொழுது ஏழாவது அல்ல எட்டாவது தான் படித்துக் கொண்டிருந்த ஞாபகம். அன்றைய தினத்தில் சிடி வாங்கி தான் படங்களைப்பார்ப்பது. திருட்டு விசிடி
தான் சந்தேகமே வேண்டாம். நல்ல ப்ரிண்டாக இருந்துவிட்டால் சாப விமோசனம் தான்.

இப்படத்தில் இன்னொரு பாடல் உண்டு.. சொல்லாமல் தொட்டுச் செல்லும் தென்றல்.. அதில் சில வரிகள் உண்டு விஜய்சாகர் எழுதியது

காதலிருக்கும் பயத்தினில்தான்
கடவுள் பூமிக்கு வருவதில்லை
மீறி அவன் பூமி வந்தால்
தாடியுடன் தான் அலைவான் வீதியிலே..

இதற்கு என் நண்பர் ஒருவரின் வீட்டில் கடும் கண்டனங்கள் என்று அவர் சொன்னார். 'அது எப்படி கடவுளை இப்படி கேவலமான சித்தரிக்கலாம்?' அவர் கிறிஸ்தவ மதத்தை (எந்த மதமாக இருந்தாலும் சரி) சேர்ந்தவர். எனக்கு அப்பொழுது தோன்றியது இதில் என்ன இருக்கு.. இதுக்கு எதுக்கு டென்ஷன் ஆகுறாங்க? கடவுள்தானே இருந்துட்டுப் போகட்டும் என்று. அவர் மேலும் சொல்லுவார் 'எங்க அண்ணன் எல்லாம் அழுது ஜெபம் படிப்பார் 'என்று. இதுவும் புரிந்ததில்லை கடவுளை வேண்டும் போது எதற்கு அழனும்? இதெல்லாம் அப்பொழுதே எழுந்த கேள்விகள்தான்... அப்பவே கொஞ்சம் யோசிக்க பழகியிருக்கேன். பின் வருவது இப்போதைய கேள்விகள். எப்படியும் நாம அழுது, துக்கப்பட்டு, துயரப்பட்டு எல்லா பட்டுவையும் பார்த்திருப்பார் தானே? ஒருவேளை இருந்தால். அப்புறம் எதுக்கு தனியா வேற அழனும்?

சரி அப்படியே தன்னுடைய கஷ்டங்களை சொல்லும் போது அழுகை வந்துவிடுகிறது என்று ஒரு லாஜிக்கை வைத்துக்கொண்டாலும். அவர் அண்ணன் என்று சொல்லிய நபர் கல்லூரி கூட சேரவில்லை என்பதாக ஞாபகம். இவருக்கு என்ன மீளாத் துயர்? அப்புறம் எதற்காக இப்படிப் பொங்க வைக்க வேண்டும்? விளங்கவில்லை.

சரி திரும்ப நாம பாட்டுக்கு வருவோம்.. என் நெஞ்சில் mingle ஆனலே பாடலில்

ஒன் வேயில் தனியாக இருந்தனே
இனி ரன் வேயில் ஜெட்டாக பறப்பனே
காலம் பூராவும் காதல் போராவும்
கூடி வாழும் அன்பே..

சார் வாலி சார்.. ❤️

Tuesday, April 7, 2020

கன்னித்தீவு

#கன்னித்தீவு
#நாவல்விமர்சனம்

கன்னித்தீவு நாவலின் அடிநாதமாகக் கடலும், காதலும் மற்றுமொரு தீவும்.. அது என்னவோ தெரியவில்லை எப்படியாவது ஏதோ ஒரு பாணியில் கடல் காதலைக் குடிக்கிறது. எப்பொழுதும் மனித இனத்தின் வியப்பான மாய மிகப்பெரிய நீர் குமிழ் கடல்.  பல தீவுகளை உண்டாக்கி மனிதனைத் தேடலிலே வைத்திருப்பது கடலின் வழக்கம் அல்லது விளையாட்டு. சரி நாவலின் கதாபாத்திரங்களைப் பார்ப்போம். முருகனின் பாலிருக்கும் காதலினால் எதிர்ப்புகளை மீறி  மணந்துகொண்ட பார்வதி. இவர்கள் இருவரும் நாவலின் மய்ய கதாபாத்திரம் இவர்களுக்கு இணையாக மரியா.

முருகனுக்கும் பார்வதிக்கும் இடையே இருக்கும் காதல் காமத்தை வெட்கமுறச் செய்யும் அளவிற்குண்டு. பார்வதி எப்பொழுதும் முருகனின் நினைவில் உழல்வதையே போதையெனப் பருகுகிறாள். //பெண்களுக்குச் சிங்கம் மாதிரி காதலன் வேண்டும், ஆனால் அவன் நாய் போல் அவர்கள் காலடியில் குழைய வேண்டும்// மிகச்சரியா பார்வதியும் அதையே முருகனிடம் எதிர்பார்த்தாள் அதற்கு மிகக் கச்சிதமா பொருந்திப்போனான் முருகன்.பார்வதி நிறை மாத கர்ப்பிணியான பின் அனைத்தும் மறந்து தன் பெற்றோரை அழைக்கும் முயற்சியில் நீண்ட நாட்களுக்குப் பின் தந்தை மகளுக்கான அவ்வுரையால் நெகிழ்ச்சியின் படபடப்பு. முருகனின் பகுத்தறிவு பற்றிய உரையாடல்கள் ஒவ்வொன்றும் அப்லாஸ் ரகம். மற்றும் இன்னும் பிற சுவாரஸ்யமான உரையாடல்களும் ரசனையின் கன்னம். உதாரணமாக

//"நீங்க நான் வெஜ்யா?"

நாங்க பிராமின்.

அதுக்கு இது பதிலில்லையே.//

//கடிகாரத்தில் மணிக்கொரு முறை மணியடிக்கும் தருணத்தை விட இந்த முட்களின் சேர்க்கைக் கணமே என்வரையில் சுவாரஸ்யமானது. முட்கள் ஒரு நாளில் 22 முறை ஒன்றின் மீது ஒன்று படுத்துக் கொள்கின்றன. ஒரு நாளில் 22 தடவைகள் புணரலாம் என்பதுதான் ஒரு கடிகாரத்திடமிருந்து மனிதர்கள் கற்றுக்கொள்ள வேண்டிய செய்தி.//

//விதிகளை நிரூபிக்கும் விதிவிலக்குகள்//

இந்திய, தமிழக அரசியல், பெரியார், கற்பு, தீண்டாமை என்று அனைத்து தலைப்பையும் தலைகோதியிருப்பது இதமான தேநீர் பருகிய சாயல். கடலில் பயணப்பட்டு விபத்தின் காரணமாக நிறைமாத கர்ப்பிணியான பார்வதி கரை ஒதுங்கும் தீவு நவீன மனிதர்களையும், உலகையும் உள்வாங்க விரும்பாத தனக்கான உலகத்தில் வாழ்ந்து இயற்கையை நுகர்ந்து, உண்டு, களித்திருக்கும் பழங்குடிகளைச் சந்திக்க நேர்கிறாள்.

அத்தீவிலே பார்வதியின் தோழியென அறியப்படும் மரியாவின் நேசம் தாய்ப் பாலின் தூய்மை. பார்வதிக்கும் மரியாக்கும் இடையில் இருப்பது நட்பை மீறிய அன்பின் ஆதுரம். பார்வதி மரியாவின் குழந்தைக்குத் தமிழ் கற்றுத்தர எத்தனிப்பது ஒரு குழந்தையின் அடம். தனியாகக் கழிக்கும் நாட்களில் முருகனின் நினைவுகளைச் சுவாசிப்பது தேகத்தின் தினவைத் தணியச் செய்யும் முயற்சியா? அல்லது  அவன் நினைவின் மூலம் தன் தேகத்தை விழிக்கச் செய்யும் முயற்சியா?

உண்மையில் ஒரு தீவில் உலாவி அங்கிருக்கும் பழங்களை உண்டு, அக்காற்றைக் குடித்து, அம்மேகங்களைத் தரித்து உடுத்தியது போல் ஓருணர்வு. அத்தீவில் ஒரு சுனையை  எழுத்தாளர் யோனிச் சுனை என்று வர்ணிக்குமிடம் எத்தனை உண்மையான இயற்கையின் ஆதி. சுயப்பிரசவத்தின் விவரிப்பு பிரசவித்த  உணர்வையும் ஒருங்கே இன்பத்தையும் தரவல்லது. இப்படியான நவீன மனிதர்களின் அழுக்குப் படாத தீவு புதிதாக பூப்படைந்த பதின் பருவ பெண்ணின் உடலைப் போன்றது. மாண்டு போகச் செய்யும் புதையல்களைக் கொண்டது. ஆகையால் இம்மாதிரியான இடங்களில் அவர்களின் அச்சமென்பது தற்காப்பாக மாறுகிறது. அதன் காரணமாக இத்தீவில் அன்னியர்களை அவர்கள் அனுமதிப்பதில்லை. முடிந்தவரை அவர்களை அப்படியே விட்டுவிடுவதுதான் நாம் அவர்களுக்குச் செய்யும் பேருதவி மற்றும் இயற்கைக்குச் செய்யும் நன்றிக்கடன். நவீன மனிதர்களின் சிந்தனைகள் சரியென நாம் பயணப்பட்டுக்கொண்டிருப்பது தேவையான ஆசுவாசம். இந்நாவலின் இறுதியில் எதிர்பாராத அந்த திருப்பு முனை  கருமனின் ஈட்டியெனப் பாய்ந்து இதயத்தின் துடிப்பைச் சுவைக்கிறது.

நாவலிலே எனக்கு மிகவும் பிடித்தமான வரியாக இதைச் சொல்வேன்.

//நிர்வாணத்தை மானத்தோடு தொடர்ப்பு படுத்துவதைத் தான் நாம் கலாச்சாரம் என்கிறோம். //

வாழ்த்துகள் நாவலை எழுதிய சி. சரவண கார்த்திகேயன் அவர்களுக்கு.

Saturday, March 21, 2020

அய்யப்பனும் கோஷியும்

நிறையப் பகிர்வுகளின் உந்துதலின் பெயரில் நேற்று அய்யப்பனும் கோஷியும் திரைப்படத்தைப் பார்த்தேன். நன்றாக இருந்தது ஒரே இழை மற்றும் ஒரு நிகழ்வின் எதிர்வினைகள் என்ற கதையில் அயர்ச்சி இல்லாமல் கொண்டு சென்றுள்ளனர். கடைசி இருபது அல்லது இருபத்தி ஐந்து நிமிடங்கள் குறைத்திருக்கலாம் இன்னும் செம்மையாக இருந்திருக்கும்.

மனித மனங்களின் படிநிலைகளைப் படம்பிடித்திருக்கிறது. நான் முன்பே நிறைய இடங்களில் எழுதியது போல். வன்மம் எப்பொழுதும் ஒரு தருணம் வேண்டிக் காத்திருக்கும் சின்ன இடைவெளியில் மடைத் திறந்தது போன்று பாய்வதை எதிர்கொள்ள முடியாதளவு. உதாரணமாக நாம் எப்பொழுது கடந்து போகும் செய்தித்தாள் செய்திகளில் ஒன்று மக்கள் எல்லாரும் சேர்த்து அடித்தனர் என்பது. இதில் இடம்பெற்றிருப்பது Herd mentality. அதாவது தன் நிலையிலிருந்து வெளிப்படுத்த முடியாமலிருந்ததை ஒரு சந்தர்ப்பத்தில் தன் முகத்தைக் காட்டத் துணிவது. பொதுவாகவே நாம் நம்மை ஏதோ ஒன்றின் பெயரில் suppress செய்து வைத்துள்ளோம் என்பதே தவிர்க்க முடியாத உண்மை. பிஜீ மேனன் இயல்பாக மிரட்டியிருக்கிறார் பிரித்வியை விட. பிஜீவின் மனைவியாக வருபவர் காட்டு மரத்தின் அடித்தளம் போன்று அத்தனை உறுதியான உடல்மொழி.

தமிழில் இப்படியான படங்கள் வருவதில்லை என்று ஒப்புக் கொள்ள வேண்டும். எப்பொழுதும் அதிகாரத்தில் இருப்பவர்கள் இல்லை அதிகாரத்தில் இருப்பவர்களைத் துணைக்கு வைத்திருப்பவர்களின் கரங்களும் ஓங்கி இருப்பதை எவ்வளவு முயன்றாலும் இறக்க முடிவதில்லை என்பது கசப்பான உண்மை. சமீபத்திய உதாரணம் பொள்ளாச்சி சம்பவத்தில் கைதானவர்கள் மீது இருந்த குண்டர் சட்டம் ரத்தானது. எத்தனை இளம் பெண்களின் கதறல்களை எவ்வளவு இயல்பாக கடக்கிறார்கள். அதிகாரம் என்பது ஆளுவது மற்றும் ஆணவம் மட்டும் அல்ல தர்க்கத்தைக் காலணிகள் ஆக்கவல்லது. இங்குத் தர்க்கம் என்பது எப்பொழுதும் எளிய மனிதர்களுக்கு மட்டுமானது. அதை மட்டுமே உண்டு புசித்துக்கொள்ள வேண்டுமவர்கள்.

Sunday, January 5, 2020

கன்னி

#கன்னி ஒரு வாசிப்பனுபவம்.

கன்னி நாவல் படித்து முடித்த பொழுது எழுந்த மன உணர்வு ஓர் உறைநிலை. முடித்த பின் மட்டும் இல்லை இடையிடையே அச்சொற்கள் நம்மைக் கூட்டிச் சென்று கடலின் ஆழத்தில் நிறுத்தி நிதானிக்கச் செய்தது. பிரான்சிஸ் கிருபாவின் கவிதைகள் சில அங்கொன்றும் இங்கொன்றுமாக படித்திருக்கிறேன். ஆனால், இந்நாவலைப் படிக்கையில் வியப்பின் உச்சியைத் தலை கோதினேன்.

நாவல் முழுக்க முழுக்க கவிதைகளால் ஆனது. சந்தன பாண்டிக்கும் அமலாவிற்கும் இருக்கும் பெரும் காதலைச் சொற்களின் மூலம் போர் தொடுத்து மீட்கப் போராடியிருப்பார். கவிதையின் நாசி நாவல் முழுவதும். அமலா பாண்டிக்கு ஒரு வகையில் அக்கா முறையென்பதால் ஒரு நிலைக்கு மேல் நெருங்க முடியாமல் தவிப்பது. அவளின் அழகு, வருகை, செய்கை என்று ஒவ்வொன்றையும் கவிதை படுத்தி அவளாகவே வாழும் பாண்டி துண்டிலில் சிக்குண்ட மீனாகத் துள்ளுகிறான்.

கடல் இந்நாவலின் தேகம் மற்றும் மஞ்சள் நிறம் இந்நாவலின் வண்ணம். மனம் பிறழ்ந்த பாண்டியின் உருவகங்கள் மற்றும் காட்சிகள் பெரும்பாலும் கடலும், மஞ்சள் வண்ணம் மற்றும் ஒரு நாய். மனம் பிறழ்ந்தவர்களின் மன நிலையை இதுதான் என நாம் நிச்சயப்படுத்திக்கொள்ளும் அளவிற்கு அதனைத் தருவித்திருக்கிறார். பாண்டி தானே மணலில் சிக்கிக்கொண்டு மூச்சு திணறுவது, காதலியின் மேல் அமரும் வண்ணத்துப் பூச்சியை விரட்டுவது, அவள் மேல் விழும் முதல் மழைத் துளியை வடிப்பதும், அவளைப் பார்த்தால் ஏற்படும் உணர்வுகளின் கொதி நிலை என்று அனைத்து இடங்களிலும் சொற்களை வீணையில் மீட்டுகிறார் கிருபா.

அக்கவிதைகளைக் குறிப்பிட வேண்டுமெனில் நான் முழு புத்தகத்தைத்தான் பரிந்துரைக்க வேண்டும். ஒவ்வொன்றும் ஒவ்வொரு இனிப்பு வகை. திகட்டத் திகட்டத் தருகிறார் முடிவில் இன்சுலின் எடுக்காமலிருந்தால் சரி. உதாரணமாக இதைத் தருகிறேன்.

'பனிபடர்ந்த வார்த்தைகள் உருகி, நீராகி. அவசியமற்று கசங்கிய ஆச்சரியங்களின் புருவ மடிப்புகள் நிமிர்ந்து நேராகி கிளி போல் பேசி ஒலி கழிக்கும் சுவர்க் கடிகாரம் அயர்ந்து ஆணியில் உறங்கும்வரை காத்திருக்க முடியாமல் காட்சியொன்றின் பல்லாயிரம் பிரதிகளால் கட்டப்பட்ட மட்டமாகக் காவியமாய் என்னை விழுங்கி உமிழும் உன் மரித்தவனின் விழிச்சாயலோடு திறந்திருக்கும் இம்மரக்கதவுகளை அரவமின்றிச் சாத்திவிட்டு விலகிப்போய்விடுகிறேன். பூரண நிலவின் பின்னிரவுப் பார்வையில் பொன்னலங்காரமமேற்று நீளும் இவ்வீதியில் நீ காவல் வைத்திருக்கும் அச்சம் மோகினியின் கொலுசு மணியை கிணுங்கி முன் செல்ல மெல்ல நடை உதைத்து அர்த்தங்களின் வாழ்வு பூர்த்தியுறும் அர்த்தமற்ற பயணக்கோடுகளின் வசீகர அழைப்போடு புவி ஈர்ப்பின் நிகர கதிகளை மீறி நிழல்போல் நடந்து மறந்துவிடுகிறேன் எல்லைகளற்ற மர்ம வெளியில். சிலைகளில் திறக்கப்படாத விழிகளாக நீ ஒளித்து வைத்திருக்கும் மகத்தான சிறப்புக் கூடத்தின் கதவுகள் தானாகத் திறந்து இடிகள் முழங்கி மாபெரும் திகைப்பில் கட்டி நிறுத்தட்டும் நானற்ற வெறுமையை.'

இப்படி எண்ணற்ற சொற்கடல் மீள முடியாமல் மீண்டும் மீண்டும் அதன் அலைகளில் சிக்கித் திளைக்கலாம். பாண்டிக்கும் அமலாவிற்கும் இடையே இருக்கும் காதல் நெருங்கவிடாமல் செய்யும் அதீத கண்ணியம் பாண்டி சந்திக்கும் அடுத்த பெண்ணான சாராவிடம் பிணையும் வேர் போன்று. அமலாவிடம் ஒடி ஒடி காலைச்சுற்றி ஒரு தலைகோதலை வேண்டும் செல்ல நாய்க் குட்டியைப் போலிருந்த பாண்டி. சாராவிடம் தன் செழித்த ஆண்மையின் நிழலைக் கண்டதாய் நெகிழ்வான். ஆனாலும், இக்காதலில் நாம் அமலாவைப் பிரித்துப் பார்க்கவியலாது பாண்டி அமலாவை சாராவிடம் கண்டு கட்டுண்டுப் போவான். தீயாய் நெருங்க முடியாத அமலாவ.. தீயில் நெருங்கி விரல் வைக்குமிடமாய் சாராவிடம் புகலடைவான். சந்தேகமின்றி

தீக்குள்
விரலை வைத்த
காதல் இன்பம்
இப்புனிதம்

மஞ்சள் நிற உடையில் அமலாவையும், சாராவையும் பார்த்து லயித்து அவன் மனம் அந்நிறத்தில் கரைந்து மீண்டும் கரையேறுவான். அமலாவிடம் கடலோரத்தில் நடைபெறும் உரையாடல் அத்துணை மலர்களின் செறிவு. உணர்வுகள்தான் நம் வாழ்க்கை.. ஞாபகங்கள் தான் நாம் இவையிரண்டும் அன்றி வாழவியலாது. இருவரையுமே பிரிந்துப் போக வேண்டிய நிர்ப்பந்தம் பாண்டியின் தலையில் மிகப் பெரிய ஆலமரமே ஆணியாக இறங்கிப் பிறழ்ந்து போவதைத் தவிர வேறு உசிதமல்ல. சாராவின் மேல் கொண்ட காதலில் வரும் வரிகளில் ஒன்று "அவளைக் கண்டதும் மூளைக்கு வாலும் இதயத்துக்குக் காலும் முளைக்குமா? "

அதே அவளின் இன்மையில் அவனானது. எவ்வளவு வேண்டுமானாலும் பேசிக்கொண்டிருக்கலாம் கன்னியைப் பற்றி. தஸ்தவேவ்ஸ்க்கியின் வெண்ணிற இரவுகள், யூமா வாசுகியின் மஞ்சள் வெயில் வரிசையில் பிரான்சிஸ் கிருபாவின் கன்னியும். இன்னமும் உண்மை சொல்ல வேண்டுமென்றால் தஸ்தவேஸ்க்கியின் வெண்ணிற இரவுகளை விட மேலானது. அதைக் கொண்டாடிய இலக்கியத் துறை எதற்காக? ஏன்? பிரான்சிஸ் கிருபாவின் கன்னியைக் கொண்டாடவில்லை என்று தெரியவில்லை. பல்வேறு மொழியில் 'கன்னி' நாவலை மொழி பெயர்த்துக் கொண்டு செல்லக் கூடிய அத்தனை தகுதிகளும் உடையது. அவ்வாறு கொண்டு செல்வது கிருபாவிற்கு மட்டுமல்ல தமிழைத் தாய் மொழியாகக் கொண்ட நம் அனைவருக்குமே செருக்குதான்.

'கன்னி'யை வாசித்தால் இதயம் கனிந்து சொட்டும் காதலின் பால். அடிக் கடலென ஆழ்மனதில் பயணப்பட்ட உணர்வு. நட்சத்திரங்களை எண்ணிக் களைத்த இரவின் உறவு. பெரும் மழையில் கடலில் துடுப்பு போட்டதை போன்ற உவகை. வாசித்து மடியலாம் வாருங்கள்.. ❤️❤️