Monday, May 13, 2019

இட ஒதுக்கீடு

எனக்குத் தெரிந்த பெண் ஒருவர் 23 அல்லது 25 வயது உடையவர். அவர் சுயதொழில் செய்துதான் தன் குடும்பத்தைப் பார்த்து வருகிறார். அதற்கு முன் அப்பெண்ணின் அக்கா பார்த்தார் அவர் கல்யாணம் செய்து கொண்டு போய்விட்டதால் இப்பொழுது இப்பெண். இவர்களுக்கு ஒரு தம்பி உண்டு இந்த இளைய பெண்தான் தன் தம்பியை எம்.ஏ வரை படிக்க வைத்தார். அவரின் தம்பிக்கு ஒரு நல்ல வேலை கிடைத்தால் அப்பெண் குடும்பம் கொஞ்சம் தழைக்கும். தம்பி பேராசிரியர் தேர்வு  எழுதி வெற்றி பெற்றார் ஆனால், அரசு வேலை கிடைக்கவில்லை. அவர்கள் OC  பிரிவைச் சேர்ந்தவர்கள். எனக்கு அந்த வேலையைச் சார்ந்த தகவல் தெரியாது. அப்பெண் என்னிடம் SC பிரிவைச் சேர்ந்தவர்களுக்குக் குறைந்த வருட  அனுபவமே போதும் அரசு வேலை கிடைப்பதற்கு எங்களுக்கு அதிகம் தேவைப்படுகிறது. இதனால்  இந்த  SC பிரிவைச் சேர்ந்தவர்கள்தான் இப்பொழுது  அனைத்து இடங்களிலும் நன்றாக இருக்கின்றனர் எங்களைப் போன்றவர்களுக்கு இதுதான் நிலைமை  என்றார்.

என்னால் முடிந்த வரை இட ஒதுக்கீடும், சாதி அரசியலும் சமூகத்தில் அதன் தாக்கமும் எனச் சொல்லிப்பார்த்தேன்.  உயர் சாதி ஏழ்மையில் கூட இருந்துவிடலாம். ஒடுக்கப்பட்ட சாதி மக்கள் மென்மை நிலையிருந்தாலும் அங்கும் ஒடுக்கப்படுவர் என்றேன். ஒருவாறாக தலையாட்டி வைத்தார். அவருக்கு அவர் தம்பிக்கு வேலை கிட்டவில்லை என்ற ஆதங்கம்.

பேசியதை வேறு  ஒருவருடன் பகிர்ந்த போது அதற்கு அவர் "ஏதோ அந்த பொண்ணு தன் தம்பிக்கு வேலை கிடைகிலன்ற கஷ்டத்தில் சொல்லியிருக்கு. அவ கிட்ட போய் அரசியல் கதை பேசிட்டு வந்திருக்கையே?" அப்படியென்றார்.

எனக்கும் கொஞ்சம் நெருடல் வந்தது தேவையில்லாமல் பேசிட்டனோ என்று. மீண்டும்  ஒரு வாரம் கழித்து அவரை சந்திக்கும் போது அவர் ஒரு குட்டி கதை சொன்னார் எனக்கு.

"ஒரு விசேஷமான கோயில் அக்கா  அது. நாமம் போட்டுயிருந்த ஒரு பெரியவர் போய் அந்த கோயில் பூசாரிகிட்ட எனக்கு ஒரு எலிமிச்சை பழம் வேணும்ன்னு கேட்டார் அதுக்கு அந்த பூசாரி காசு குடுத்தா குடுப்பன்னு சொன்னார். பத்து ரூபா குடுன்னார். இந்த பெரியவர் காசில்லைன்னார். ஆனால், பழம் வேணும்ன்னார். அந்த பூசாரி முடியாதுடார். அதுக்கு இந்த பெரியவர் வெளியே வந்தபடியே அவர் இஷ்டபடி திட்டிட்டே வராரு 'இதுக்குதான் கண்ட கண்டவனெல்லாம் பூசாரியாகப் போடக்கூடாது. இப்படி இவனுங்கள எல்லாம் உள்ள விட்டதால்தான் இப்படி இருக்கு.' அப்படி இப்படின்னு சகட்டுமேனிக்கு திட்டுறார் அக்கா. எத்தனை அயிர்ங்க காசு போட்டாதான் திறுநீரே தராங்க. அப்பத்தான் அக்கா நீங்க சொன்னது எனக்கு புரிஞ்சது. எவ்வளவு  உண்மை நீங்கச் சொன்னது".

எனக்கு நெருடல் மறைந்து நெஞ்சம் நிறைந்தது.

உறியடி -2

இம்முறை உறியடி 2 திரைப்படத்தில் எடுத்திருக்கும் விஷயம் ஆலைகளின் நச்சு வாயு வெளியேறி கிராம மக்களைப் பலி வாங்குவது. வழக்கம்போல் இவர்களின் சாதி அரசியலும், பிணத்தை வைத்து அரசியல் ஆதாயம் தேடுவதென அத்தனையும் உண்மையின் புகைப்படம்.

இவ்வளவு உண்மை எடுக்காதீங்கய்யா அழுக வருது. அந்த நச்சுக் காற்றைச் சுவாசித்து மக்கள் மடிவதும். ஆலையத்தில் போதிய பாதுகாப்பு வசதி இன்மையால் அதற்கு முன் ஊழியர்கள்  இறப்பதும் பற்றி எரியும் சுயநலவாதிகளின் ஆதிக்கம். நிஜத்தைத் தொட்டுச் சாப்பிட்டது உண்டா நிறையக் கசக்கும் கொஞ்சமாகக் காரம் சமயத்தில் புளிக்கும் அப்படிதான் இருந்தது.

வேறு ஏதுவாக இருந்தாலும் கொஞ்சம் தங்களைக் காப்பாற்றிக் கொள்ள வாய்ப்பு கிடைக்கும். சுவாசிக்கும் காற்றில் என்றால் என்னதான் செய்ய முடியும்? ஒரு அம்மா தன் கை குழந்தையை எங்கு வைத்து மூடி காப்பதெனப் பதறும் அந்த காட்சி நிர்மூலம். இறுதியாக ஒரு அலமாரியில் வைத்து மூடுவார். மூடப்படும் அக்கதவின் பக்கத்தில் ஸ்ரீஸ்டி வரைந்திருக்கும். ஒரு வசனம் வரும் "நீ என்ன வேண்டிக்கிட்ட சாமிகிட்ட" அதற்கு விஜய் குமார் சொல்வார் "நீ நிஜமா இருக்கனும்ன்னு, ஏன்னா எவ்வளவு பேர் உன்ன நம்பிட்டு இருக்காங்க" அப்படியென்று.

எனக்கு எதற்கு அரசியல்  அப்படி என்று சொல்பர்களுக்குத்தான் இப்படம். ஆமாம் "அரசியலில் நீங்கள் தலையிடவில்லை என்றால் , அரசியல்  உங்கள் வாழ்க்கையில் தலையீடும்" .

"அக்கினிக் குஞ்சொன்று கண்டேன் - அதை
அங்கொரு காட்டிலொர் பொந்திடைய
வைத்தேன்!

வெந்து தணிந்தது காடு

தழல் வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றும்
உண்டோ?" 🔥🔥🔥

நாம சொன்னா யார் கேட்பா

பொள்ளாச்சி வன்கொடுமை பற்றிய உரையாடலில். நான் நண்பருடன் பகிர்ந்தது "முதலில் பிள்ளைகளுடன் முடிந்தவரை உரையாடுங்கள். அவர்களுக்கான ஸ்பேஸ் கொஞ்சம் கொடுங்கள். மற்றும் நீங்கள் தர வேண்டிய துணிவு என்பது அவர்களுக்கு "நீ என்ன தப்பு வேணும்னாலும் செய்யலாம். ஆனா, அதை தைரியமாக என்கிட்ட சொல்லனும். அப்படி என்கிட்ட சொல்ல முடியாத தப்புன்னா அதை நீ செய்யாத" என்பதாக இருக்கவேண்டும்  என்றேன்.

இதையே சில காலம் முன்பு கொஞ்சம் மாற்றி வேறு மாதிரி ஒரு மேடையில் பேசியிருந்தார் கரு. பழனியப்பன்  அந்த காணோளி இப்பொழுதுதான் காண நேர்ந்தது. இதையே நான்சொன்னா யாரு கேட்குறா?

இங்கு ஒரு விஷயம்  யாரால் சொல்லப்படுகிறது..மற்றவர்கள் அதை எப்படி எடுத்துக் கொள்கிறார்கள் என்பதே இங்கு மிகப்பெரிய அரசியல்.  இதையும் நான்சொன்னா  யார் கேட்பா?

இன்றைய இந்தியா

இன்றைய இந்தியான்னு ஒரு புக் வாசிட்டு இருக்கேன் இன்னும் முடிக்கல. கொஞ்சம் பெரிய புக் 900 பக்கங்கள்.  இந்த புத்தகம் வெளி வந்தது 1940 அதுவும் இங்கிலாந்தில். ஏன்னா இந்தியாவில் இது தடை செய்யப்பட்ட புக். பூராவும் டேட்டாஸ் எடுத்து அப்படியே பைண்ட் பண்ணி வச்சிருக்காங்க.

இத்தனை ஆண்டு கழித்து படிக்கும் பொழுதே  பிரிட்டிஷ்  ஆளுகள குறைஞ்சது நாலு பேருத்தையாவது தூக்கிப்போட்டு
 மிதிக்கலாம்ன்னு தோணுது. நமக்கு அதுக்கு திராணி இல்லதான் பட் அது வேற டிப்பான்ட்மெண்ட் . அப்ப படிச்சா வெறி பிடித்த ஆடுவார்கள் என்பதில் துளியும் சத்தேகமில்ல அதான் பயபுள்ளைக பேண்ட் பண்ணியிருக்கு.

அப்படி பிரிட்டிஷ்  ஆட்சிக்காலத்தை பொத்தாம் பொதுவா அடிமை படுத்தி வச்சிருந்தாங்கன்னு மட்டும் சொல்லி கடந்திட முடியாது என்பது இந்த புக்கத்தகத்தை படிக்கும் பொழுது புரியுது. மொத்தமா சிதைச்சியிருக்கானுங்க இந்தியாவை. வெள்ளக்காரன் ஆட்சியில் இருந்திருந்தாலே நாடு முன்னேறி இருக்கும்ன்னு சொல்றவங்க  எல்லா லைன்ல  வாங்கய்யா.

இந்த புத்தகத்தை முடித்தவுடன் ஒரு முழு பதிவி போடுறேன். இந்த புத்தகத்தை எழுதியவர் (ஆங்கிலத்தில்) ரஜினி பாமிதத். இவர் உலக புகழ்பெற்ற மார்க்சிய  அறிஞர்.  இதை தமிழாக்கம் செய்தது எஸ். ராமகிருஷ்ணன் முதல் பதிப்பு 2008. வரலாறு மிக முக்கியம் அமைச்சரே.

#இன்றைய இந்தியா

அன்பை மட்டும் விதையுங்கள்

சமீபத்தில் காணப்படும் பதிவுகள் அடுத்தவரை விமர்சிக்கிறேன் அல்லது அடுத்தவர் கருத்தை விமர்ச்சிக்கிறேன் என்ற பெயரில் அவர்கள் மனதில் வைத்து இருக்கும் அத்துணை வன்மத்தையும் இங்கு கொட்டுவது. இது என்ன மாதிரியான மன நிலை என்று புரியவில்லை.

அடுத்தவர் என்ன சொல்ல வருகிறார்கள் என்பதையும் புரியாமல் அனத்துவது. அவர்களை தரக்குறைவாக விமர்சிக்கிறேன் என்று  தன்னை அசிங்கப்படுத
த்திக்கொள்ளுதல். இது எல்லாம்  சரியென்று அமோதிக்க ஒரு கூட்டம் வேறு. ஒரு கட்டத்திற்கு மேல் அக்கூட்டம் யோசிப்பதை நிறுத்திவிடுகிறது. தேமே என்று அவர்கள் எதைச்சொன்னாலும் சரியென்று மனநிலைக்கு வந்துவிடுவது என்ன மாதிரியான வியாதி என்று தெரியவில்லை. முடிந்தவரை அடுத்தவர்களின் உணர்வை மதியுங்கள் அல்லது ஒதுங்கிவிடுங்கள். ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையும் வேறானது ஒருக்காலும் உங்கள் வாழ்க்கையோடு ஓப்பீட்டு எதையும் இதுதான் சரியென்ற முடிவுக்கு வர இயலாது. அப்படி முடிவுக்கு வந்தால் அது உங்கள் முட்டாள் தனம். ஒரு விஷயம் உங்கள்  அறிவுக்கோ அல்லது அனுபவத்திற்கோ ஒத்துப்போகவில்லை என்றால் அதை தவிர்த்து போதல் என்பதே பக்குவம்.  முடிந்தவரை அடுத்தவர்களிடம் மென்மையாக நடந்துக் கொள்ள முயற்சி செய்யுங்கள். அன்பை மட்டும் விதையுங்கள். 💕💕

Super Deluxe

ஆரண்ய காண்டம் படம் பார்த்த பிறகு சூப்பர் டிலக்ஸ் படத்திற்காக மிக ஆர்வத்துடன் காத்திருந்தது வீண் போகவில்லை. முதல் காட்சி சமந்தா தன் முன்னாள் காதலுடன் கூடிய பின் அவர் இறந்துவிடும் காட்சி அதைப் பிசகாமல் கணவனிடம் சொல்லிவிட்டால் தவறில்லையா?  என்ற கருத்து ஒருபுறம் இருக்கட்டும். சமந்தா பரிதாபத்தின் பெயராலும், எப்படியோ இவன் இப்படி இருப்பதிற்கு நாம் காரணமாகிவிட்டோமே என்று காதலுடன் கூடியது எதார்த்தமாக நடக்கக் கூடியதே. அவள் அதைக் கணவரிடம் சொல்லுமிடத்திலிருந்து இவ்வுண்மை எவ்வளவு தூரம் எப்படி பயணப்படுகிறது என்பதை தி.குமாரராஜா அவர் பாணியில் பொது சிந்தனையாளர்களின் மன வழியே நுழைந்து தன்நிலையில் வெளியேறி வெற்றிபெற்றிருக்கிறார்.

அடுத்ததாக பதின்வயது பள்ளி மாணவர்கள் நான்கு பேர் காணவிருக்கும் நீல படத்தில் தன் தாயைப் பார்த்து வெறித்தனத்தோடு. தாயைக் கொல்ல வரும் அந்த பையனின் மனநிலை பதட்ட உண்மையென்றாலும் தண்டனை தாய்க்கு மட்டுமே இச்சமுதாயம் தரும் என்பது  என்றுமே மறுக்கப்படாத மற்றும் கூடாத விதியாகக் கடைப்பிடிக்கிறார்கள். பார்வையாளர்களுக்கு எந்த பண்பாட்டுக் குறையும்  இல்லை. அதில் இடம் பெறுபவர்களுக்கு மட்டும் தான் .  உடனே அப்போது நீல படம் பார்த்தாலே தப்பா என்றால்? இல்லை. ஆனால், அதில் இடம்பெற்றவர்களை மட்டும் பழித்து உங்கள் வன்மத்தை தீர்த்துக் கொள்ளவேண்டாம் என்பதே  வேண்டுகோள். உள்ளபடியே தர்க்கங்களை கேள்விக்குறியாக்கியிருக்கிறார் தி.கு. இங்கு சரி தவறு என்று எதுமில்லை. செல்லுமிடத்தில் மட்டுமே தர்க்கம் காக்க போராடுவீர்கள் அவ்வளவே.

மெல்ல உள்ளோடி பார்த்தால். கொஞ்சமெனும் விளங்கும் அடுத்தவரைக் குறை சொல்லவோ, அறம் பிறழ்ந்தார்கள் என்று சொல்லவோ இங்கு யாருக்கும் எந்த தகுதியுமில்லை. அடுத்தவரின் கண்களைக் குத்துவது சுலபம் என்பதாலோ என்னவோ அதை சகட்டுமேனிக்கு செய்கிறோம்.

மூன்றாவதாகக் கல்யாணம் செய்து ஒரு பிள்ளையும் கொடுத்துவிட்டு ஏழு வருடங்கள் கழித்து திருநங்கையாக வரும் விஜய். சே. வழக்கமான நடிப்பில் பெண்மையான மிரட்டல். ஆரண்ய காண்டத்தில் கொடுக்காப்புளி கதாபாத்திரத்தை  இங்கு ராசுக்குட்டி இடம்பெயர்த்துவிடுகிறார். அப்பா பெண்ணாகவே வந்தாலும் தன் அப்பா திருப்பி கிடைத்துவிட்ட கொண்டாட்ட மனநிலைதான் படத்தில்  பாஸிடிவ் வைபரேஷன். ராசுக்குட்டியும் அவன் அப்பாவாக வரும் ஷில்பாவும் அன்பு புரளும் இடம் தனித்துவ ததும்புகள். அதுவும் கோபித்துக் கொண்டு கதவின் பின்னாலிருந்து  ஒலிக்கும் அவ்வசனம் அவ்வளவு பெரிய விஷயத்தை இப்படி தேநீருக்குச் சர்க்கரை சேர்ப்பது போல் இணைத்திருந்தார் இயக்குநர். "யார் யாரோ கிண்டல் பண்ணாங்க நானும் அம்மாவும் எதனா சொன்னமா? நீ ஆம்பிளையாவோ இல்லை பொம்பளையாவோ எப்படி வேணா இரு. ஆனா, எங்க கூடவே இரு ". "இருந்து தொலை". என்று சொல்கிற அந்த அன்பை எதைக் கொண்டும் நிரப்ப முடியாது அது ஒரு வரைய முடியாத  ஓவியம். என்ன ஒரு மனத் தடை  என்றால் அவர் மனைவியாக வரும் காயத்திரியின் நிலை வருந்ததக்கதேயாகும்.

ஒரு திருநங்கையாக எதிர்கொள்ளும் வாழ்வின் அப்பட்டங்களை நிகழ்த்தி நெளிகிற செய்கிறார். காவலராக வரும் பேர்லின்(பக்ஸ்) போன்ற கதாபாத்திரங்களும் இருக்கத்தான் செய்கின்றனர் சாலையோர மலங்களைப் போல. அந்த நான்கு மாணவர்களில் காஜி என்ற கதாபாத்திரம் இயல்பாக மனதில் நின்று வெட்கமாகக் கரைகிறார். சமந்தாவின் கணவனாக உண்மை தெரிந்த அவஸ்தையில் பகத்பாசில் கொஞ்சம் ப்ளேவர் சேர்த்திருக்கிறார் அதிலும் பொதுச் சமூக கோபத்தின் வசனங்கள் இன்னும் தேன் சேர்ப்பு. யுவனின் இசை இப்படத்தில் எளிய மனிதர்கள் கடவுளுக்குப் படைக்கும் சாப்பாடு அத்தனை ருசி.

கடவுள் அர்பணைப்பாளராக வரும் மிஷ்கின் போன்ற மனிதர்களுக்கு இச்சமூகமே சாட்சி. ரம்மியாகிருஷ்னனின் வசனம் "சுனாமியின் போது நீ இந்த சிலைய பிடிக்காம ஒரு கரடி பொம்மையை கட்டி பிடிச்சிருந்தா? அதை கும்புடுவியா?" போன்ற வசனங்கள்  இப்படத்தின் நாசி. நிச்சயம் புக் பண்ணலாம் இந்த சூப்பர் டிலக்ஸ்சை. ராவாத்தான் இருக்கும் துணிந்து குடிக்கலாம். மோர் ஊற்றி இறக்கிவிடுகிறார் தி.குமாரராஜா. வாழ்த்துகள்.

Wednesday, March 6, 2019

மானசரோவர்

மானசரோவர் நாவல் வாசித்ததில் கிடைத்தது சில பதில்கள் . கிடைக்காமல் போனது முடிச்சுகளின் தொடக்கம் அதாவது,  வாழ்வின் முடிச்சுகள். வாழ்வின் அனைத்து விஷயங்களிலும் தர்க்கம் பார்த்துக் கொண்டிருக்கக் கூடாது . கூடாது என்பதை விட முடியாது என்பதே சரி. இந்த வாழ்க்கை நம்மை இட்டுச் செல்லும் இடம்தான் எது . எதுவுமே இல்லை.  யாருமற்ற ஒரு வானாந்திரம். பட்சிகள் தன் கூடு இருக்கும் வரை அங்கே திரும்பிக் கொண்டிருக்கும்.

மகிழ்ச்சி, ஆசுவாசம், அன்பு, அற்பம், கொண்டாட்டம், பழிவாங்கல், துரோகம்,  வன்மம், பரிதவிப்பு, என்று எண்ணற்ற உணர்வுகள் மற்றும் படி நிலைகள். இறுதியில் வந்து நிற்குமிடம் நமக்கே நமக்கான வெற்றிடம்.

இதில் யாரைக் கொண்டு பூர்த்தி செய்வது?. எதைக் கொண்டு பூர்த்தி செய்வது?. அப்படியே செய்தாலும் அவை எவ்வளவு தூரம் நம்முடன் பயணப்படும்? கமல் ஒரு திரைப்படத்தில் சொல்வது கேள்விக் கேட்பது சுலபம். அதற்கான பதில்கள் என்றுமே நிர்மூலமாகத்தான் இருக்கும். எதையும் கேள்விக்குட்படுத்தாது ஏற்கும் மனநிலை  அமைந்தால் நல்லது அது முட்டாளாக இல்லை பக்குவத்தின் பெயரால். இந்த நாவலில் வரும் கோபால் போல். ஆனால், நாமோ சத்தியன் போல்தான் தடுமாறுகிறோம். இரு நண்பர்களின் உறவும் அவர்களின் வாழ்க்கையே இந்நாவல்.

தர்க்கம் என்ற வரையுரையே சமயங்களில் மிக முட்டாள்தனமானது. அதற்காக, எப்படி வேண்டுமானாலும் இருந்துவிடலாம் என்று பொருளில்லை. எப்படி ஆட்க்கொள்ளப் படுகிறோம் இவ்வாழ்க்கையின் புழுதியில் என்பதே நிதர்சனம்.  கோப்பால் போல் எடுத்துக்கொள்ளப் பழகிவிட்டால் வாழ்க்கை அத்தனை இலகுவானதே. ஆனால், அது முடியாது என்பதே முரண். நம் மனநிலையை ஒத்ததுபோல் சத்தியன் நாவல் முழுவதும் திண்டாடுகிறார். பகுத்தறிந்து வாழ வேண்டும் என்பதே அவா. உணர்வுகள் இடிந்த கட்டிடம் போல் நம்மேல் குவியும் பொழுது சுவாசிக்கவே திணறுகிறோம். இதில் எங்கு வாழ்வது? வாழ்க்கை ஒரு ஞான சூனியம். அனுபவமே ஞானம்.

#மானசரோவர்

Wednesday, February 27, 2019

சுஜாதா நினைவுநாளை ஒட்டி ஒரு பதிவு

#சுஜாவின்நினைவுநாள் ❣❣

முன்குறிப்பு: கொஞ்சம் பெரிசுதான் படிச்சுடுங்க.

சுஜாதாவே என் வாசிப்பின் தொடக்கக்கால எழுத்தாளர். அப்படி ஓர் ஈர்ப்பு உண்டு அவர் எழுத்தின் பால். எழுத்துகளை விரயம் செய்வது அறவே பிடிக்காது அவருக்கு. ஒரு பேராவில் சொல்ல வேண்டியதை ஒரு வரியில் முடித்துவிடுவார். எழுத்தின் நயமும்,  அதில் நகைப்பும் மென்னையாக மலரின் மணம் போல் இழைந்தோடும்.

ஒரு வித்தியாசமான பாணியில் கதையைத் தொடங்குவதும் முடிப்பதும் அவருக்கே உரியப் பாணி. நான்பிக்ஷனையும் எளிதாக பிக்ஷனில் கொண்டு வந்துவிடுவார் என்பது அவர் கட்டுரைகளில் புலப்படும். மிக நவீனமாக  இருக்கும் அவர் எழுத்து நடை. அதிகமான ஆங்கில சொற்களை நமக்கு அறிமுகப் படுத்தியவர். சுவாரஸ்யமே அவரின் ஊற்றுக் கண். நாம் ஆயாசமாகிவிடும் இடம் வருவது தெரிந்து அங்கிருந்து ஓர் இழை எடுப்பார் தொடர்ந்து நம்மை இட்டுச் செல்ல. அவரின் குறுநாவல்கள், நாவல்கள், சிறுகதைகள் என்று அனைத்திலும் வியாபித்திருக்கும் அறிவியல். எத்தொன்றையும் சட்டென அறிவியல் பாணியில் விளக்கிவிடுவதில் அவர் ஒரு காட் ஃபாதர். 

காதல் கதைகள், க்ரைம் த்ரில்லர்,  சைன்ஸ் ஃபிக்ஷன் இன்னும் பல இத்தியாதிகளில் புகுந்து விளையாடியவர். என்னளவில் சைன்ஸ் ஃபிக்ஷன் கதைகளை முதலில் தமிழில் அதிகம்  அறிமுகப்படுத்தியவர். இனிப்பைக் கண்டால் உற்சாகத்துடன் ஓடி வரும் குழந்தைகள் போல் துள்ளல் உண்டாக்கியது இவரின் எழுத்துக்களே. இவரின் க்ரைம் த்ரில்லர் கதைகளில் வரும் கணேஷ்,  வசந்த் கதாபாத்திரங்கள் பெருவாரியான மக்களைக் கவர்ந்தது. எனக்கும் மிக அணுக்கமான ஒன்றுதான் அப்பாத்திர படைப்புகள். வசந்த் செய்யும் குறும்புத் தனங்கள் . பேசிக்கொண்டே நமக்கு ஊசிப் போட்டுவிடும் டாக்டரை போல் மிக மெல்லிய அடல்ட் ஒன்லி ஜோக்ஸ் இடையில் புகுத்திவிடுவார். கணஷின் இன்டலிஜென்ஸ் என்று ஒரு மாதிரி கலந்துகட்டி க்ளாஸ் ஆகயிருக்கம்.

மூன்று கடிதங்கள் என்ற ஒரு கதை..கடிதம் ஒன்று இரண்டு மூன்று என்று கொடுத்திருப்பார். இதில் எது சரியென புரிந்துக்கொள்ளக் கதை முடிந்த பின்னும் கொஞ்சம் யோசிக்க வேண்டும். ஒரு எழுத்தாளனின் வெற்றியென்பது வாசகர்களைச் சிந்திக்க விடுதல் அதற்கான ஸ்பேசை சுஜாதா வாரி வழங்குவார். ஒரு லுப் கதையும் உண்டு. உடம்புதான் முடியவில்லையே என்று மருத்துவமனையில் கொண்டுச் சேர்த்தால் அங்கிருந்து மீண்டு வந்து. அதனையும் பல வண்ண  மாத்திரைகளா அள்ளி நம் மும் வைக்கிறார். அவரின் நிலையை நின்ற மேனிக்கு நகைச்சுவையோடு பரிமாறுவது ஒரு சிறப்பான விருந்து வாசகர்களுக்கு.

அவரின் நேரடி அனுபவமும், அவரின் மைண்ட் வாய்ஸையும் படிக்க சுஜாதாவின் கற்றதும், பெற்றதும் என்ற இதழில்  படிக்கலாம் பாகங்களாக. இந்த இடத்தில் விகடனிற்கு நன்றி சொல்லியே ஆகவேண்டும் எனில் அவரை எழுத சொல்லி வற்புறுத்தியதற்காக. இல்லையேல் நமக்குக் கிட்டாமலே போயிருக்கும் ஒரு ஆத்ம சுவை. அவரின் அறிவியல் அறிவை அள்ளிக்குடிக்க சுஜாதாவின்

ஏன்?
எதற்கு?
எப்படி?

படியுங்கள். சுஜாதா ஒரு எழுத்தாளர் மட்டும் அன்றி பன்முக வித்தகர் என்ற சொலவடைக்கு இணையாக இருப்பவர். பெல் நிறுவனத்தில் பணி புரிந்து,  இந்திய விமான துறையிலும் பணிப் புரிந்து மற்றும் EVM Electronic voting machine வடிவமைத்துக் கொடுத்தவர். திரையுலகிலும் கால் பதித்தவர். திரைக்கதை , வசனங்கள்  எழுதினார். ஷங்கர் மற்றும் மணிரத்தினம் படங்களில் உடன் பணியாற்றியவர். அவருக்குப் பின் ஷங்கர் படங்களில் ஜெயமோகன் வசனம் எழுதுவதை ஏற்றிருக்கிறார் மனமோ சுஜாதவைத் தேடி மருகுகிறது.

எதுவாகயிருப்பினும் காலத்தின் ஓட்டத்தோடு ஒத்துப்போதல் என்று சொல்லக்கூடிய survival of the fittest என்பதற்குச் சரியாக வரக்கூடியவர் சுஜாதா. என் நினைவில் வரும் மற்றொருவர் வாலி இருவருக்குமே சொந்த ஊர் ஸ்ரீரங்கம்தான் மற்றும் இருவரின்  உண்மையான பெயரும் ரங்கராஜன் தான். என்ன ஒரு coincidence பாருங்கள்.  மிகச் சரியாகச் சொல்ல வேண்டும் என்றால் காலத்திற்கு முன்பே செல்லக் கூடியவர் அதை அவர் கதைகளில் காணலாம். ஒரு விமான கடத்தல் கதை எழுதிய பின்தான் காத்மாண்டு விமான கடத்தல் நடந்தது கிட்டதட்ட அவரின் கதை போலவே. அதற்கு அவரே பதில் அளித்திருந்தார் நான் என்ன தீர்க்கதரிசியா அப்படியெல்லாம் இல்லை என்றும் உலகில் பல விஷயங்கள் இப்படி பொருந்திபோவதைப் பட்டியல் இட்டு இது எல்லாமே ஒரு தற்செயலாக நடப்பதே இதில் எந்தவித கற்பிதங்களையும் கொள்ள வேண்டாம் என்றார். 

எளிய வழியில் மக்களுக்குச் சேர நிறைய எழுதியுள்ளார். சிலப்பதிகாரம், புறநானூறு,  திருக்குறள். மற்றும் சிறுகதை எழுதுவது எப்படி?, திரைக்கதை எழுதுவது எப்படி ? என்று எளிய முறையில் பயிற்றுவிக்கும் நூல்களும் தந்துதவினார். அவரின் வாசகர்கள் அவருடன் தேடி உறவாடுவதும், கோபித்துக் கொள்வதும், அன்பு பாராட்டுவதும் என நடந்தேறியுள்ளது. ஒருவர் அவர் இல்லம் தேடிச் சென்று உங்களின் அனைத்து கதைகளும் பிரசுரம் ஆகிறது என்னோடது என் ஆகவில்லை படித்துக் கூறுங்கள் என்றாராம் அது ஒரு காதல் கதை அதில் போதிய வர்ணனைகள் இல்லாததால் நீங்கள் காதலித்து இருக்கிறீர்களா? என்றார் சுஜாதா அவர் இல்லை என்றதும். காதலித்துவிட்டு வந்து எழுதுங்கள் என்றார்.
அதன் பின் இவர் சொல்கிறார் He had the last word என்று "நீங்கள் கூடத் தான் கொலைகளைப்பற்றி கதை எழுதுகிறீர்கள்".

ஒருவருடன் உரையாடியதைக்கூட அவ்வளவு அழகாக வடிப்பார். ஒரு புதுமண தம்பதிகளை நலம் விசாரித்ததில் அந்த மாப்பிள்ளை மிகவும்  அலுத்துக்கொண்டார் அவருக்கு எப்பொழுதும் கைகளை நடுவில் இடுக்கி கொண்டு சுருண்டு படுப்பதுதான் பழக்கமாம் இப்பொழுது முடியவில்லை என்று. அதற்கு அவர்  'உங்கள மாதிரி ஆளுங்கதான் சார் இப்படியெல்லாம் எழுதிடுறீங்க ஈர் உடல் ஓர் உயிர்ன்னு'  என்றார். பெரும்பாலான ஆண்கள் அப்படிப் படுப்பதற்கான உளவியல் காரணத்தைக் கூறிவிட்டு. 'அது நான் இல்லப்பா சினிமா பாடல் ஆசிரியர்கள்ன்னு சொன்னேன்'. 'ஒரு வேலை அவர்களுக்கு  இந்த பழக்கம் இல்லையோ என சொல்லிப்பார்த்தேன்' என்றார். அவரின் முதல் கதை வெளியான அனுபவத்தை ஸ்ரீரங்கத்துத் தேவதைகள் கதைகளில் வரும் . அவர் வீட்டின் அருகே இருக்கும் கடையில் அவ்வளவு துரிதமாகப்  புத்தகங்கள் அனைத்தும் விற்றுத் தீர்ந்துவிட்டது  எனில் அனைத்தையும் நானே வாங்கிவிட்டேன் என்பார்.

இம்மாதிரி கலந்து கட்டிய காக்டெயில் சுஜாதா. என்னதான் ஜெயகாந்தன்,  ஜெயமோகன், கல்கி, ஜானகிராமன் என்று படித்தாலும் அடுத்த வீட்டுக் குழந்தைகளை எவ்வளவு கொஞ்சினாலும்  மீண்டும் நம் வீட்டுக் குழந்தையை கொஞ்சும் பொழுது ஒரு சகம் வரும் பாருங்க அதுமாதிரி மனம் சுஜாதாவிடம் வந்து நின்றுவிடுகிறது. ஆங்கிலத்தில் ஒரு சொல் உண்டு sapiosexual என்று. Yes. I love him because, of his intelligence.

-சுபாஷினி

Thursday, February 21, 2019

தமிழ் திளைத்தல்

தமிழ்பாற்கடலில் சிறு மீனென
நீந்தித் தமிழ் அறிய
முற்படும் திறக்காத சிப்பியாக.
சொற்களில் உலாவிப்
பொருட்களில் புதைந்து
இலக்கியத்தில்  அயர்ந்து
எழுத்துருவங்களில் இயைந்து
சொல்லாடலில் இசைந்து
அதன் தன்மையில் நெகிழ்ந்து
புலன்களைப் புணர்ந்து
எங்குதான் இட்டுச் செல்கிறது
இம்மொழி?
பைந்தமிழ்
பாவலர்தமிழ், செந்தமிழ்
என்று எத்துணை
பெயர்களில் அழைத்தாலும்
எதிலும் அடைத்துவிட முடியாது
ஒளியின் துகளென
நின்தமிழ் நிற்கும்
தூணாக நூற்றாண்டு
அழிவுகளைத் தாண்டி
இடரேதும் இல்லாமல்
தாவரங்களினூடே
ஊடுருவிச் செல்லும்
காற்றென நுழைந்து
எங்கும் நிறைந்திருக்கும்
பிறை நிலவென.
கல் தோன்றி , மண் தோன்றா
காலத்தில் தோன்றிய
தமிழென்பது என்ன
விண் சென்று நிலவில்
குடிபுகுந்தாலும்
நின்றாளும் எம்தமிழ்
பருகப் பருக
முடியாத மிடறாகச்
சுரந்துக் கொண்டே
இருக்கும் செழித்த
தாயின் முலைப்பால்போல்
செருக் உண்டு எனக்கு
தமிழ் குடித்து
இளைப்பாறியதால்
மிடுக்கும் உண்டு
தமிழ் உண்டு வளர்ந்ததால்
சுருங்கச் சொன்னால்
தமிழ் வாசித்தல்
ஒரு சுய இன்பம்.

#தாய்மொழிதின #நல்வாழ்த்துகள்
#சுபாஷினி

Wednesday, February 20, 2019

யுவன் இசையும் பதின்ம வயதும்

இது காதலா முதல் காதலா பாடல் நேற்று கேட்டுக்கொண்டு இருக்கையில் காலம் எப்படி புல்லட் டிரைனில் விரைந்துள்ளது என்று புரிந்தது.  அப்பாடல்  வந்த பொது சரியான பள்ளிப்பருவம் பதின்ம வயது. அப்படியே தேனில் ஊறிய பேரிச்சம் போல் இழைந்துவிடும் மனம் அதில். அது ஒரு காம்போ செல்வராகவன், யுவன், பதின்மவயது..அப்படியே நினைவுகளில் அப்பட்டமாக நிரம்பியுள்ளது.

மெல்ல மெல்ல யுவன் இசை நம் வாழ்க்கையில் நுழைந்த தருணம் அது பாலுக்கு நடைப்போடும் பசித்த பூனைப் போல். உணர்வுகளை மலர் குவியலென  அதன் மென்மையோடு காட்டிய ராட்சத  இயக்குனர் செல்வராகவன் ஒரு புறம்  எனத் தித்தித்த தினங்கள். துள்ளுவதோ இளமை, காதல் கொண்டேன், 7g..மூன்றும் ஒவ்வொரு கிரகத்தின் வாசல். இசையே அங்குக் காற்று. அம்னீஷியா வந்தாலும் sub consious மைண்டல நிற்கும் இப்பாடல்கள். ஒர் இசையை நம்முள் நுழைந்து அவை நிகழ்த்தும் உணர்வு பரிணாமங்கள் இருக்கிறதே அது சொற்களால் சாத்தியமில்லை முழுவதும் கூறிவிட.

இந்த மூன்று படங்களில் முதல் படம் அவ்வளவு கொண்டாடும் விதமில்லை என்று தோன்றுகிறது எனக்கு. அப்படத்தில் ஒரு தற்கொலை காட்சி வரும். படத்தின் முடிவில் தனுஷ் மிலிட்டரி கெட்டப்பில் வருவார் அதை பார்க்கும்பொழுது நமக்கே தற்கொலை பண்ணிக்கலாம் என்று  தோன்றும். ஆனால், அச்சமயத்தில் இப்படியான திரைப்படம் மிகவும் அவசியமான ஒன்று யாரும் தொடாத தீவைப்போல்.

பாடல்கள்தான் நெகிழவைத்தது வயதே வா வா சொல்கிறது, கண்முன்னே எத்தனை நிலவு, என்று ஒவ்வொன்றும்  அருமை. காதல் கொண்டேன்,7g  எல்லாம் என்றும் கொண்டாடும் ரகம் திரைப்படமும் சரி பாடல்களும் சரி. காதல் கொண்டேனில் வரும் அந்தச் சின்ன சின்ன பாடல்கள்  எல்லாம் ஐஸ்கிரீம் குழைவு.

நட்பினிலே நட்பினிலே பாடல்
தத்தி தத்தி தாவுதே நெஞ்சம்..பாடல் என்று ஒவ்வொன்றும் கிளாஸ்சிக். காதல் கொண்டேன், 7g தீம் மியூசிக் எல்லாம் குழந்தையின் மழலைபோல் ரசித்துக்கொண்டே இருக்கலாம். யாரும் அற்ற தனிமையில் எனக்கே எனக்கான இசை  உண்டு.

இசை ஓர் உணர்வுக் கடத்தல்,
ஆட்கொல்லி, சமயங்களில் சிறந்த மருந்து, பருக முடியாத போதை.


Tuesday, February 19, 2019

மடவளி

மடவளி  என்று ஒரு புத்தகம் 2017 விகடன் விருது வாங்கிய புத்தகம். நாவிதர்களையும், வண்ணார்களையும் பொதுவாக மடவளி என்று அழைக்கிறார்கள். அதுவே இந்நாவலின் பெயர். உள்ளாட்சித் தேர்தலின் ஊடாட்டல் பற்றி அப்படமாக வடித்துக் கொடுத்திருக்கிறார் கவிப்பித்தன். தேர்தல் சமயத்தில்  இப்புத்தகம் படித்தது ஒரு நல்ல அனுபவமாக வாய்த்தது. சரியான தருணம். உள்ளாட்சித் தேர்தல்  என்பது எத்தகைய விஷயங்கள் உள்ளடக்கிய என்பது தெரிய வரும் பொழுது பிரம்மிப்பாக இருந்தது. பணம் பட்டுவாடா  என்பதுதான் அனைவருக்கும் தெரிந்த ஒன்று.  ஆனால், அதைத் தவிர்த்தே எத்தணை அரசியல் செய்ய வேண்டியுள்ளது.  ஊரில் இருக்கும் அனைவருடனும் உறவாடியே தீர வேண்டும்  என்ற நிர்ப்பந்தம் நோயாளி கட்டாயம் மருந்து எடுத்துக் கொண்டுதான் ஆக வேண்டும் என்பதைபோல. 

எவ்வளவு சாதுரியமாகக் காய்களை நகர்த்த வேண்டும். எவ்வளவு பணம் தண்ணீர்க்கு மட்டுமே தண்ணீராகச் செலவழிக்க வேண்டும் என்பதெல்லாம் காட்டில்  தண்ணீர் காட்டியதுபோல் இருந்தது. துணிமணிகள், கறி என்று விருந்து படைக்கிறார்கள். தேர்தலில் நிற்பவர்களுக்கு இது போர்களமாகவும் அந்த ஊர் மக்களுக்கு இது மாபெரும் கொண்டாட்டமாகவும் இருக்கிறது. இதனுடே சாதிய ஒடுக்குமுறைகளும், அதன் குறுக்கீடுகளும் இழையே ஓடவிட்டு மனதில் தறி நெய்கிறார் கவிபித்தன். அதில் வரும் காதலுக்கு சாதி வன்முறை வெடிப்பது வெறிக்கொண்டு அவர்களை வெட்டத் தேடும் சாதிய வன்மத்தையும் கண்முன்னே நிறுத்திருக்கிறார். அந்நாவலில் வரும் மனோகரன் என்ற கதாப்பாத்திரம் ஒரு  அப்பாவி மனிதனின் தர்க்கப்பூர்வமாகக் கேள்விகளும், குழப்பங்களிலும் தள்ளாடும் விதம் அருமை. இதுதானே நியாயம்  என்று மனோகரன் கேட்டும் அத்தனை இடங்களிலும் நியாயத்திற்கு விலை கொடுக்க வேண்டிய நிர்பந்தம். அதை அவன் மனம் எதிர்க்கொள்ளும் விதம் ஆற்றின்  வெள்ளத்தில் சிக்கி தலைக்கு மேல் தண்ணீர்  செல்வதுப்போல் இருக்கும்.

அரசியல் என்பது ஒரு கலை அது அனைவருக்கும் வருவதில்லை. சுட்சமம், வன்மம்,  துரோகம், பகடை என்று அனைத்தையும்  உள்வாங்கிக்கொண்டால்தான் அரசியல் செய்ய முடியும்  என்ற இன்றைய நிலையை நிறுத்தியுள்ளார். உண்மையாகவும், எந்தச் சமரசமும்  இல்லாமல் நேர்மையாகவும் நடக்க முயற்சிக்கும் மனோகரனுக்கு மூன்று முறை தோல்வியே ஆரத்தழுவுகிறது. கொஞ்சமும் நாவலின் சுவாரஸ்யம் குறையாமல் எடுத்துச் செல்கிறார். இறுதி கட்டத்தில் மனோகரன் வெற்றி பெற வேண்டும்  என்ற படபடப்பு வாசகர்களுக்கு வந்துவிடுகிறது. ஓட்டு எண்ணிக்கையில் மனம் ஜன்னல் காற்றில் பறக்கும் துப்பட்டாவை போல் துடிக்கின்றது. சட்டென  ஒரு வெறுமை சூழ்ந்து முடிகிறது நாவல். சாதிய வன்மங்களும், அதன் நீட்சியும் விடாது தொடர்ந்துக்கொண்டேதான் இருக்கின்றது நிழலைபோல்.

Wednesday, February 13, 2019

தேநீர் சுவை

உடுத்தாத சேலையின் 
மடிப்பைக் கலைக்கும்
குழந்தையின் குதூகலம்
வந்துவிடுகிறது 
நீ தவிர்க்கையில்
தரப்படும் முத்தம்.


யாதொரு பாவமும்
அறியாது
பாகனின் சொல் கேட்டு
கால்கள் சங்கிலியால்
பிணைப்பட்டு நடந்து
வந்த யானையின்
வாழ்க்கையில்
மதமென வந்தாய்.


கடைசி இரவின்
முந்தைய பகலில்
வந்த மாலையில்
அருந்திய தேநீரின்
நிறம் எப்பொழுதும் 
போல்தான் இருந்தது
ஆனால், சுவை இன்னும் பயணித்துக்
கொண்டு இருக்கிறது.

குளிராமல் இருக்கும் பொழுது
போர்த்திக்கொள்வதுப்போல் உள்ளது
நீ வேண்டாம்
எனும் பொழுது
வரும் உன் ஞாபகங்கள்.

அத்து வானக் காட்டில்
யாருமில்லாமல் பறவையோடு
சிலாகித்திருப்பது
ஒரு நயமான சுகம்
இதனால் வாழ்க்கை 
பயனடையுமா ?
என்றால், இல்லை தான்
ஆனால், அதற்காக
சுகத்தை வேண்டாம்
என்பதா?

வெள் ளெருக்கஞ் செடியின்
விதைப் பூவாக பறக்கும்
தாத்தக்களைப் பிடித்த
சிறுமியின் பூரிப்பு
உணர்வைத் தருகிறது 
நீண்ட நாட்களுக்குப் பின்னான உன் சந்திப்பு.

உயிர் பிழைத்து வா
மாலை வெயில் வாஞ்சையோடு
நினைவுகளை அருந்தி
தேனீர் பகிர்வோம்.

பாதி உறக்கத்தில்
வரும் கனவுப்போல்
எல்லாம் நிகழ்ந்தது.
இருப்பினும் அந்த
மந்தகாச நினைவுகள் 
மங்காமல் கலங்கடிக்கிறது.

Friday, January 25, 2019

பேரன்பு



கொலுசு மட்டுமே ஆடையாய்

இருக்கும் பொழுது
வெட்கம் போர்த்தி
உன் முத்தத்தை மறுதலித்தேன்.


பேரன்பைப்  பெறுவதற்கு 
பெரும் ஆயத்தம் வேண்டும்.



மழைக்கும் மண்ணுக்கும் 

எப்படி உறவுண்டோ
அதே உறவு மழைக்கும்
கொஞ்சலுக்கும் உண்டு.


காத்திருப்பு தான் அன்பைக் கூட்டும் இயந்திரம்.


மழை நேரத்தில் 

என் பிரத்தியேகமான
ஆடை நீ.




சில்லேன என் மேல் விழும் தூறல்
சூரிலேன உன்னை
நினைவுபடுத்துகிறது.



கரையாத பொழுதொன்றில்
முழுவதும் கரைந்து 
நுரைகளில் நிறைந்திருந்தேன்


வெடித்து அழுகும் ஒரு அழுகையில் 
தேக்கி வைத்த முழு அன்பும் வெளிப்படும்.


வழியெங்கும் வேதனைகள்
கடக்கக் கடக்க
வந்து கொண்டே இருக்கிறது
நீண்ட வானம் போல்.



உன் கண்கள் பேராயுதம்

உன் காதலை விட.


எழுதாமல்விட்ட கவிதைகள் 
எல்லாம் நீ சிகையை
சரிசெய்கையில் பறக்கிறது


பாசிப்படிந்த குலத்தின்
குளிர்ந்த நீரில் 
முதலில் பதியும் பாதம்
போல் சில்லிடுகிறது
சில நினைவுகள்.

நினைவுக் கோப்பையில்
மதுபோல் மிதக்கிறேன்.


எரியும் தேகத்தை
அணைக்க வேண்டும் 
வியர்வைப் பெருங்கடல்.

ஒளித்து வைக்க முடியாது 
உணர்வுகள் மெல்லப் புகையாக படர்கிறது.


காதலின் பால் காமம் வளர்ப்பது ஒரு வழி..
காமத்தின் பால் காதல் வளர்ப்பது ஒரு வழி..
எதுவாக இருப்பினும் காமத்தின் பால் ஒரு காதல் உண்டு.

வெப்பம் போக்க
மீண்டும் ஈரம் கேட்பேன்.

மீள முடியாத
நினைவுகளில்தான்
மீட்கிறேன்


போர்வைகள் எப்பொழுதும் 
போர்த்த மட்டுமே 
பயன்படுவதில்லை.

இல்லாத ஆடைமேலேல்லாம்
பரவியது உன் வாசம்.


விலகுதலும் சேருதலும்
தானே காதல் அல்லது காமம்.

மழையின் வேகthதிற்கு
ஈடு கொடுக்க முடியாமல்
பனியாய் உருகினேன்.


பனியின் விடுதலை
சூரியனை அடைவதிலே உண்டு.


மழைக்கும் மண்ணுக்கும் 
எப்படி உறவுண்டோ
அதே உறவு மழைக்கும்
கொஞ்சலுக்கும் உண்டு.



பின்னிரவில் வரும்
நண்பகல் கனவு
பிரயாசையின் சுவடுகள்



மிதந்து போகும்
பரிசலேன மனம்
நீரோடை வாழ்வில்,
ஊடாடும் நீர் 
சுழிகளென 
வேகத் தடைகள்.



உன்னை நேர்கோட்டில்
சந்திப்பதைத் தவிர்த்து
வட்டமடித்துக் கொண்டிருக்கிறேன்
வாழ்வில்.



ஞாபக கண்ணாடியின்
பாதரசம் போனாலும்
அப்பின்பம் நிலைத்திருக்கவே செய்கிறது.



விடாப்பிடியாக விட்டுப் பிடிப்பதில் 
என்ன விளையாட்டு.


நல்ல குளிர்
கடும் தவத்தையும்
அசைத்துப் பார்க்கிறது
காற்று கல்லை அசைப்பதைப்போல்.



காற்றைப் போல்
ஆரத்தழுவுகிறது
உணர்வுகள் உடலெங்கும்.



முத்தச்சாவி
உயிர் வழியைத் திறக்க
உதவுகிறது.




கீச்சுகள்

துக்கத்தில் இருப்பவர்களுக்கு நாம் செய்யும் பேருதவி என்பது ஆறுதல் சொல்வதை விட , அவர்களுடன் மெளனித்து இருத்தலேயாகும்.


புறக்கணிக்க முடியாத பேரன்பு என்பது குடையுடன் அடை மழையில் சிக்கிக்கொள்வதேயாகும்.

எந்த விஷயமாக இருந்தாலும் அடுத்தவங்களை பார்த்து இது சாத்தியமில்லைன்னு சொல்லக் கூடாது..அந்தச் சூழலில் இருந்துப்பார்த்தால்தான் அது தெரியும்.

ஆடைகளை எப்படிக் களைகிறோம்
என்பதல்ல காமம். எப்படி ஆடையாக இருக்கிறோம் என்பதில் இருக்கிறது.


விரும்புகிறவர்களின் விருப்பத்தை மதிப்பது என்பது ஒரு மாண்பு அது அனைவருக்கும் வருவதில்லை.

சிலர் சொவ்வது பொய் என்று தெரிந்தும் அது தெரியாததைப்போலவே சமாளிப்பது என்பது வலிக்காத மாதிரியே நடிப்பது.

குழைவதெல்லாம் கொஞ்சுவதில் சேராது.

தேவைகளின் முடிவென்பது நம்மைத்  தீர்க்கும் வரை நீண்டு கொண்டேயிருக்கும்.

இயல்பாக நடிக்கிறேன் என்று
அப்பட்டமாக மாட்டிக்கொள்கிறார்கள்.

விரும்பியவர் நெருக்கமாக இருக்கும்
பொழுது உலகமே தொலைவில் இருக்கிறது .

சமயங்களில் தர்கங்கள் அவசியமற்றது.

நம்ப வைத்து செருப்படி கொடுக்கும் வாழ்க்கை.

தெரிந்தவர் தானே என்று யோசித்துக்கொண்டு இருக்கும் பொழுதே பேச ஆரம்பித்துவிட்டேன்..தவறேதுமில்லை நினைவு கூர்ந்து நலன் விசாரித்து புன்னகை புரிவதில்.


கொஞ்சமும் நாம் சொல்ல வருவதை புரிந்துக்கொள்ளாமல் ...நம்மை குறை சொல்வதிலே குறியாக இருப்பவர்களிடம் பேசுவது நேர விரயம் மட்டுமல்ல மடத்தனம்.

Original கும்பகோணம் டிகிரி காஃபி அப்படின்னு போர்ட் வச்சியிருந்தாலே அது சர்வநிச்சயமா Duplicate தான். # Verified

நினைவுகளுக்கு எதற்கு குறிப்பு. நினைவே குறிப்புதானே.

அன்பைப்போல் நம்மை நாராக கிழிக்கும் ஆயுதம் வேறில்லை.

எதோ ஒரு துயரத்தை, சொல்ல முடியாத பிரியங்களின் உணர்வை, விழுங்கிய வலிகள் என்று எல்லாம் ஒரு சேர தந்துவிடுகிறது ஒரு சில பாடல்கள்.

எல்லா சந்தர்பங்களிலும் நழுவி விட முடிவதில்லை.

சில பேர் சில விஷயங்களை புரிஞ்சுக்கவே வேண்டாம் என்பதுதான் அவர்களின் எதிர்பார்ப்பு அல்லது தேவை.

வலிகளை அனுபவ பட வேண்டும். அப்பொழுதுதான் வாழ்க்கையை கொண்டாட முடியும்.

எனக்கு கடவுள் குறித்து எந்த ஆச்சிரியமும், கேள்விகளும் இல்லை.. எல்லாமே மனிதர்களை குறித்துத்தான்.

தூக்கம் ஒரு தற்காலிக ஆசுவாசம்.அனைத்து பிரச்சனைகளிலிருந்தும்.

அப்பாக்களின் இயல்பு, இயல்பற்று இருப்பதே.

தேடுபவை யாவும் கிடைக்காமல் இருப்பதுதான் வாழ்க்கையின் சுவாரஸ்யம்.

நாம் நினைப்பதெல்லாம் நடந்துவிடுவதில்லை வாழ்க்கையில்..அதேப்போல் நாம் நினைத்துக்கூட பார்க்க முடியாத விஷயங்கள் நடந்தேறுவதே வாழ்க்கையின் சுவாரஸ்யம்.

வண்டில போற கவுண்டமணி காமேடிப்போல் வாழ்க்கையில் நமக்கு பிரச்சனை இரண்டு மோட்டார்சைக்கிள் இருப்பக்கமும் வருது நாம் நடுவில் போகலாம்ன்னு பார்த்தா..பெரிய லாரியா வந்து ஏறுது.

காத்திருப்பு சமயங்களில் அலாதி 

காலத்திற்கும் என்றால் 

அது சாபம்.

புனைந்து போன வாழ்க்கையில்

வடிகால் தேடுவதுதான்

எத்தனை முட்டாள்தனம்.

மீள முடியாத எண்ணங்களிலிருந்து 

வெளியேறுவதே விடுதலைதான்.


அற்ப அன்பு அனைத்தையும் ஆட்டுவிக்கிறது.

மறதியே சமயங்களில் சரியான மாற்று.

நமக்கு வெட்டப்படாத குழிகளில் கூட விழுந்து எழுவதுதான் இந்த வாழ்க்கையின் டிசைன்.

பேரன்பை பெறுவதற்கு பெரும் ஆயத்தம் வேண்டும்.

தீபாவளி பண்டிகை என்பது சிறப்பு திரைப்படமும், தின்பண்டமும், பட்டாசும் என உங்களுக்கு கடந்திருந்தால் நீங்களும் ஆசிர்வதிக்கப்பட்டவரே

சுவாரஸ்யம் தர தவறுவதில்லை வாழ்க்கை.

தீராத மோகம் கொண்டு காட்டில் அலைந்ததை போன்ற உணர்வு..ஜெயமோகன் காடு நாவல் வாசிப்பு.

ஜெயமோகன் நாவல்கள் காடும், இரவும் ஒரு அனுபவம். இரவு ஸ்காட்ச் என்றால் காடு ஒரு டாஸ்மாக் பீர். #ஜெயமோகன்

அதிகம் மொபைபில் யூஸ் பண்ணி. இப்பயெல்லாம் நார்மல் photo print பார்த்தாலும் zoom பண்ண போகுது விரல். இதே technology addiction.


நல்ல தமிழென்பது வெய்யிலிருந்து தாகத்தில் வருபவருக்கு குளிர்ந்த நீர் பருகியதுப்போல் உள்ளது.

மரியாதை என்கிற போதை இருக்கே..எல்லாத்தையும் விழுங்கிடும்.

ஆகச்சிறந்த ஆத்திகவாதிகளுக்கு இருக்கும் வசதி என்னவென்றால் விடை தெரியாத விஷயங்களுக்கெல்லாம் கடவுளை திணித்துவிடுவார்கள்.

காலம் அனைத்தையும் நீர்த்து போக செய்து வெறும் காட்சிகளென நம்மை கடத்துகிறது.

அழகு ஒர் ஆழ்துளை கிணறு ..இறங்கினால் நம்மை எங்கோ இட்டுச்செல்லும்.


சின்ன சின்ன தற்கொலைகள் செய்யவில்லை என்றால் வாழ்க்கையை வாழவே முடியாது.

எழுவதென்பது உறங்குவதுப்போல் அத்தனை சுலபமல்ல.

ஒவ்வொரு மனிதனும் தனி உலகம் என்பதை ரயில் பயணங்களில் உணரலாம்.

தேனீருக்கு இணையாக என் மனம் உனக்கு அடிமையாகியிருக்கிறது.

மனப்பின்பம் என்பதும் மனசாட்சி என்பதும் வெவ்வேறு என்பதை அறிக.


'உன்னை நான் சுதந்திரமாகதானே வைத்துள்ளேன்' என்பதைப்போல் அப்பட்டமான அடிமைத்தனம் வேறில்லை.

பொங்கல் பொருட்களோடு ரூபாய் ஆயிரம் தந்தது உண்மையில் எடப்பாடி செய்ய நன்மையா இல்லை இதுவும் ஓட்டு வாங்க நடத்தும் நாடகத்தில் ஒன்றா. எதுவாகயிருப்பினும் பல இல்லங்களில் இந்த ஆயிரம் நிச்சயம் சர்க்கரை பொங்கலை தரவல்லது.

அன்பு அத்தனைக்கும் ஆசைப்பட்டு

இறுதியில் அன்பையே

இழந்துவிடுகிறது.

கலவிக்கு எந்த கற்பிதமும் வேண்டியதில்லை 

பசியைப்போல்.


அழியாத கோலத்தில்

உன் நினைவுகள் வண்ணங்களாய் ஒளிர்கிறது.


என் மனம்

உன் வியர்வை மணம் வேண்டி மடிகிறது..

மண்வாசனைக்கு ஏங்கும் விவசாயிப்போல்.

மெளனத்திற்குத்தான்

எத்தனை மொழிப்பெயர்ப்பு.


தடுமாற்றமும், பயமும் இராத வாழ்க்கை என்ன வாழ்க்கை.

ஆகப்பெரிய வஞ்சனை ஒருவரிடம் பேசாமல் தவிர்ப்பது.

செல்லாத காசை செலவழிக்க பாடுப்பட்ட கதைத்தான் சில உறவுகளை நிலைப்பெற வைக்க முயல்வது.

ஒரு சில நபர்கள் நம்மை எவ்வுளவு காயப்படுத்தினாலும், அவமானப்படுத்தினாலும் தாங்கிக்கொண்டே செல்வோம். ஒரு புள்ளிக்கு வந்ததும் அவர்களை விட்டு விலக தொடங்குவோம். அதன்பின் அதே நபர் எவ்வுளவு இசைந்து வந்தாலும் நாம் மீண்டும் இணைய முயல்வதேயில்லை. அந்த ஒற்றை புள்ளியே சுயமரியாதை எனப்படுவது.